மனம்போன போக்கில் குண்டர் சட்டம் பாய்வதா? லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐபிஎஸுக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்!
High Court Slams Arun IPS : பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் மீது குண்டர் தடுப்பு சட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டது தொடர்பாக அப்போதைய காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ்- இன் செயலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
சென்னையில் பிரபல ரியல் எஸ்டேட் அதிபராக இருந்து வருபவர் சந்தோஷ் வர்மா. இவர், அடுக்குமாடி குடியிருப்புகளை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்திருந்ததாக கூறப்படுகிறது. அந்த புகாரின் அடிப்படையில், ரியல் எஸ்டேட் அதிபர் சந்தோஷ் வர்மா மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில், சந்தோஷ் வர்மா கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், சென்னை காவல் ஆணையராக இருந்த அருண் ஐ.பி.எஸ். ரியல் எஸ்டேட் அதிபர் மீது குண்டர் சட்டத்தை பதிவு செய்ய உத்தரவிட்டார். அதன்படி, சந்தோஷ் வர்மா மீது குண்டர் சட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டது.
குண்டர் சட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு
இதற்கான உத்தரவு கடந்த 2025- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22- ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ரியல் எஸ்டேட் அதிபர் சந்தோஷ் வர்மா மீது பதியப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை எதிர்த்து அவரது மகள் வர்ஷா ஷர்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை, உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க: ஸ்டைலாக என்ட்ரி கொடுத்த முதல்வர் விஜய்.. தலைமை செயலகத்தில் பட்டு வேஷ்டி, பட்டு சட்டையில் ஜொலிப்பு!




அருண் ஐபிஎஸ் அதிகாரிக்கு நீதிமன்றம் கண்டனம்
இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணையை மேற்கொண்ட நீதிபதிகள் பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் சந்தோஷ் வர்மா மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும், குண்டர் சட்டத்தை எதற்காக பயன்படுத்த வேண்டும் என்பது ஒரு ஐபிஎஸ் அதிகாரிக்கு தெரியாதா? எதன் அடிப்படையில் ரியல் எஸ்டேட் அதிபர் மீது குண்டூர் சட்டம் வழக்கு பதிவு செய்யப்பட்டது என்று கேள்வி எழுப்பியதுடன் அப்போதைய சென்னை மாநகர காவல் ஆணையரும், தற்போதைய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு தலைவருமான அருண் ஐபிஎஸ்- இன் இந்த செயலுக்கு நீதிபதிகள் கடுமையாக கண்டனத்தை தெரிவித்திருந்தனர்.
ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு தலைவர்
தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு ஏடிஜிபி-யாக இருந்து வந்த அருண் ஐபிஎஸ் சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக நியமனம் செய்யப்பட்டிருந்தார். தற்போது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அவர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: தமிழ்நாடு தாங்காது “சிஎம் சார்”… சட்டம் – ஒழுங்கு குறித்து உதயநிதி காட்டமான விமர்சனம்!