ஜாதி பாகுபாட்டால் மனவேதனை.. கோவையில் தீயணைப்பு வீரர் சீருடையில் தூக்கிட்டு தற்கொலை.. மனைவி கண்ணீர் புகார்!
Coimbatore firefighter self harmed : கோயம்புத்தூர் மாவட்டத்தில் பணியிடத்தில் உயர் அதிகாரிகள் ஜாதிய பாகுபாடு பார்ப்பதால் மன வேதனை அடைந்த தீயணைப்பு வீரர் ஒருவர் சீருடையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக கவுண்டம்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர் .
தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் அழகேசன் ( 23 வயது). இவர், கடந்த 2025- ஆம் ஆண்டு தீயணைப்புத் துறையில் பணியில் சேர்ந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் இவருக்கு திருமணம் நடைபெற்றது. கோயம்புத்தூர் மாவட்டத்தில், கவுண்டம்பாளையத்தில் செயல்பட்டு வரும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் பணிபுரிந்து வந்த அழகேசன் அந்த பகுதியில் தனியாக அறை எடுத்து தங்கி இருந்தார். இந்த நிலையில், நேற்று காலை சுமார் 10 மணி அளவில் வழக்கம் போல அழகேசன் பணிக்கு புறப்பட தயாராகிக் கொண்டிருந்தார். இந்த நிலையில், திடீரென அவர் தனது சீருடையில் இருந்தபோது அறையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
காவல் நிலையத்தில் மனைவி பரபரப்பு புகார்
இது தொடர்பாக தகவல் அறிந்த கவுண்டம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், அவரது சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, தீயணைப்பு வீரர் அழகேசனை மனைவி தாரணி கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் தனது கணவர் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாகவும், எங்களது திருமணத்திற்கு ஊதியம் இல்லாத விடுப்பு வழங்கப்பட்டது.
மேலும் படிக்க: பழனி நில முறைகேடு வழக்கு.. நிரந்தர சார்பதிவாளர்- உதவி அலுவலர் சஸ்பெண்ட்!




பணியிடத்தில் ஜாதிய பாகுபாடு பார்க்கும் அதிகாரிகள்
மேலும், கடந்த 2 மாதங்களாக எனது கணவருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. முன்னதாக பணியில் இருந்த போது எனது அவரிடம் ஜாதி குறித்து உயர் அதிகாரிகள் பாகுபாடு பார்த்ததாகவும், திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு விடுமுறை அளிக்காமல் மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் என்னிடம் கூறியுள்ளார். எனது கணவர் வழக்கம் போல ஞாயிற்றுக்கிழமை இரவு பணிக்கு சென்று விட்டு மீண்டும் செல்போன் மூலம் பேசுவதாக கூறி இருந்தார். எனவே, அவரது தற்கொலை சம்பவத்தில் எனக்கு மிகுந்த சந்தேகம் உள்ளது என தெரிவித்து இருந்தார்.
தீயணைப்பு வீரர் உடல்கூறாய்வு அறிக்கையின்…
அந்த புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தீயணைப்பு வீரரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதில் கிடைக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாக காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், தீயணைப்பு துறையில் உயர் அதிகாரிகளும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீயணைப்பு வீரரே அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: பதைபதைக்கும் விபத்து.. மதுரை அருகே ஜேசிபி மீது கார் மோதி கோர விபத்து.. ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு!