மீண்டும் ஒரு வேங்கைவயல் கொடுமை? வேடசந்தூர் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலப்பு.. திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பு!
Vedasandur Drinking Water Tank Issue : திண்டுக்கல் மாவட்டத்தில் மேல் நிலை குடிநீர் தேக்கத் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வடமதுரை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே அய்யலூர் பகுதியில் உள்ள தங்கம்மாபட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 300- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில், மதிய உணவு இடைவேளையின் போது, மாணவர்கள் பள்ளியின் அருகே உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் குடிநீர் அருந்த சென்றனர். அப்போது, குடிநீரில் ஏதோ துர்நாற்றம் வீசியது மாணவர்களுக்கு தெரியவந்தது. உடனே, இது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியரிடம் மாணவர்கள் புகார் தெரிவித்தனர். அதன்படி, இந்த பகுதியை சேர்ந்த சிலர் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியில் ஏறி சென்று பார்த்த போது, அதன் உள்ளே பிளாஸ்டிக் கவர் மிதந்து கொண்டிருந்தது. அதனை கைப்பற்றி கீழே கொண்டு வந்து பார்த்தனர்.
வடமதுரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை
அதில், மனித கழிவுகள் சுற்றப்பட்டு இருந்தது தெரியவந்தது. மேலும், அந்தக் கவரில் ஒரு எச்சரிக்கை வாசகம் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர், இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் தரப்பில் வடமதுரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், வடமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். மேலும், அந்த குடிநீர் தொட்டியை சுற்றிலும் இரும்பு கம்பிகளால் ஆன தடுப்புகள் அமைத்ததுடன், அந்த குடிநீர் தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்வதற்கு தடை விதித்தனர்.
மேலும் படிக்க: காஞ்சிபுரம் தொழில் வளர்ச்சி மையத்தில் முதல்வர் ஜோசப் விஜய் ஆய்வு.. அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை!




திண்டுக்கல் எஸ்பி நிகழ்விடத்தில் ஆய்வு
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் அருந்தும் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்
ஏற்கனவே, புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயலில் கடந்த 2022- ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த சம்பவமும், அந்த குடிநீரை அருந்தியவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட சம்பவமும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதில், முரளி ராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: எடப்பாடி அளித்த பதவிகள் தேவையில்லை.. எஸ்.பி. வேலுமணி திடீர் போர்க்கொடி!