புதிய இடத்துக்கு மாறும் முதல்வர் விஜய்யின் அலுவலகம் – காரணம் என்ன?
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் அலுவலகம் தற்போது புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வருகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய்யின் அலுவலத்தை இடம் மாற்றம் செய்யவுல்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இடப்பற்றாக்குறை காரணமாக அவரது அலுவலகம் மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை 25 : முதல்வர் விஜய்யின் அலுவலகத்தை, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் தவெக ஆட்சியமைத்த முதலே தமிழக அரசில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. செயலாளர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் என பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் அமைச்சர்களும் தங்கள் துறையில் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதிய இடத்துக்கு மாறும் முதல்வர் விஜய்யின் அலுவலகம்
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய்யின் அலுவலத்தை இடம் மாற்றம் செய்யவுல்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் 2 கட்டிடங்கள் உள்ளன. தற்போது புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள பிரதான கட்டிடத்தில் முதல்வர் அலுவலகம் உள்ளது. மற்றொரு கட்டிடம் நாமக்கல் கவிஞர் மாளிகை ஆகும்.
இதையும் படிக்க : “அரசியலில் இருந்து மொத்தமாக விலகுகிறேன்”.. ராமதாஸ் அறிவிப்பு




காரணம் என்ன?
பிரதான கட்டிடத்தில் மூன்று தளங்கள் உள்ள நிலையில், இதில் அமைச்சர்களுக்கான அறைகள் உள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் அலுவலகம் தற்போது புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இடப்பற்றாக்குறை, வாகன நிறுத்துமிட வசதி குறைபாடு மற்றும் புதிய கட்டிடங்களை அமைப்பதற்கான கட்டுப்பாடுகள் போன்றவை காரணமாக முதலமைச்சர் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்ற அரசு சார்பில் தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இதையடுத்து, தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சருக்கான புதிய அலுவலகத்தை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் இருக்கும் இடத்தில்தான் அவருடைய செயலாளர்களும் பணி செய்ய முடியும் என்பதால், அவர்களுக்கும் நாமக்கல் கவிஞர் மாளிகையில் அலுவலகம் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க : “ஆறுதல் சொல்லக் கூட மனமில்லாத படுபாதக அரசு!”.. முதல்வர் விஜய்யை விளாசிய மு.க.ஸ்டாலின்!
இதற்கு முன்பு, இடநெருக்கடி காரணமாக கடந்த 2010 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலக கட்டிடம் கட்டி திறக்கப்பட்டது. அதன் பிறகு அதிமுக ஆட்சி அமைந்த நிலையில் மீண்டும் புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கே மாற்றப்பட்டது அதனைத் தொடர்ந்து, புதிய தலைமைச் செயலகத்துக்காக கட்டப்பட்ட கட்டிடம், ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த திமுக ஆட்சியில் தலைமை செயலகம் மாற்றும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு முதல்வர் அலுவலகம் மாற்றப்படவுள்ளது மக்களிடையே கவனம் பெற்றுள்ளது.