“நான் அமைச்சர்தான்.. ஆனா எனக்குள்ளும் ஒரு ரசிகன் இருக்கான்!”.. திரையரங்கில் அழுத விவகாரத்தில் அமைச்சர் விக்னேஷ் நெகிழ்ச்சி விளக்கம்!
Minister Vignesh Clarifies Emotional Crying: அமைச்சர் விக்னேஷ் ஜனநாயகன் படத்தை பார்த்து கண்ணீர் விட்டது குறித்து விளக்கம் அளிக்கையில், 30 ஆண்டுகளாகத் திரையில் பார்த்த தலைவர் இனி நடிக்க மாட்டார் என்ற உணர்ச்சி மேலிட்டதாலேயே தாம் தியேட்டரில் கண் கலங்கியதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
சென்னை, ஜூலை 25: தமிழக முதலமைச்சர் விஜய்யின் திரையுலக வாழ்க்கையின் கடைசித் திரைப்படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ திரையிடப்பட்ட திரையரங்கில், திரைப்படத்தைப் பார்த்துவிட்டுத் தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் கண்ணீர் விட்டு அழுத காணொளி சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியது. இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விக்னேஷ், தாம் உணர்ச்சிவசப்பட்டதற்கான காரணங்களை வெளிப்படையாகவும் உருக்கமாகவும் விளக்கியுள்ளார்.
மேலும் படிக்க: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் CM விஜய்.. காவிரிப் பிரச்சினைக்கு நேரடி பேச்சுவார்த்தை தீர்வாகுமா?
இனி திரையில் பார்க்க முடியாதே:
கோவை பொள்ளாச்சி சாலையில் உள்ள திரையரங்கில் ரசிகர்களுடன் அமர்ந்து ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைக் கண்டுகளித்த அமைச்சர் விக்னேஷ், படம் நிறைவடையும் தருவாயில் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் சிந்தினார். இதுகுறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது அவர் அளித்த விளக்கம், “நான் அமைச்சராக இல்லாமல் ஒரு சாதாரண மனிதனாகச் சொல்கிறேன். உலகில் உள்ள ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு குழந்தைத்தனமும், ஒரு ரசிகத் தன்மையும் நிச்சயம் இருக்கும். அதை யாராலும் மறைக்க முடியாது.
என்றென்றும் ‘தளபதி’:
நான் அமைச்சராகப் பொறுப்பேற்று சில மாதங்கள் ஆகிவிட்ட போதிலும், எனக்கு அவர் என்றென்றும் எங்கள் ‘தளபதி’தான். 30 ஆண்டுகாலமாகச் சிறுவயதிலிருந்தே அவரைத் திரையில் பார்த்து ரசிகனாக வளர்ந்தவர்கள் நாங்கள். ஆண்டுக்கு ஒருமுறை திரையரங்குகளில் பார்த்து ரசித்த என் தலைவர், இனிமேல் வெள்ளித்திரையில் நடிகராக வரப்போவதில்லை என்ற எண்ணம் மேலிட்டபோதே என்னையறியாமல் கண்ணீர் வந்தது.
விவாதப் பொருளாக்க வேண்டாம்:
திரையரங்கில் நான் உணர்ச்சிவசப்பட்டதை யாரோ வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். மனிதனின் இயல்பான அன்பையும் உணர்ச்சியையும் பெரிய அரசியல் விவாதப் பொருளாக மாற்றுவதில் நாட்டிற்கு என்ன பயன் கிடைக்கப்போகிறது?”
‘ஜனநாயகன்’ ரிலீஸ் & தமிழக அரசியல் களம்:
எச். வினோத் இயக்கத்தில் கே.வி.என் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை வாரியப் பிரச்சனைகள் மற்றும் ஆன்லைன் கசிவு உள்ளிட்ட பல்வேறு தடைகளைக் கடந்து திரையரங்குகளில் வெளியானது.
விஜய் தீவிர அரசியலில் ஈடுபட்டு, தமிழக வெற்றித் கழகம் மூலம் ஆட்சி அமைத்து முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு வெளியாகும் முதல் மற்றும் கடைசிப் படம் இது என்பதால் இதற்குக் கூடுதல் முக்கியத்துவம் கிடைத்தது.
மேலும் படிக்க: தமிழகத்தின் மொத்த கடன்.. பட்ஜெட்டுக்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்!!
அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் நெகிழ்ச்சி:
அமைச்சர் விக்னேஷ் மட்டுமின்றி, அமைச்சர்கள் சம்பத் குமார், பார்வேஸ், தலைமைச் செயலர் மற்றும் பல சட்டமன்ற உறுப்பினர்களும் பல்வேறு திரையரங்குகளில் படம் பார்த்து உணர்ச்சிவசப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.