எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் CM விஜய்.. காவிரிப் பிரச்சினைக்கு நேரடி பேச்சுவார்த்தை தீர்வாகுமா?
Cauvery issue MGR formula CM Vijay: முதல்வர் விஜய் கர்நாடகா பயணம் மேற்கொண்டு ஆகஸ்ட் 3-ஆம் தேதி அம்மாநில முதலமைச்சரைச் சந்திக்க உள்ளார். மேகதாது மற்றும் காவிரி நீர் விவகாரத்தில் எம்.ஜி.ஆர். பாணியில் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வு காண்பதே இதன் நோக்கமாகும்.
சென்னை, ஜூலை 24: காவிரி நதிநீர் பிரச்சினை மற்றும் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முயலும் விவகாரத்தில் சமரசத் தீர்வு காண்பதற்காகத் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆகஸ்ட் 3-ஆம் தேதி கர்நாடகா செல்ல உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நீதிமன்றப் போராட்டங்களுக்கு நடுவே, இரு மாநில உறவை வலுப்படுத்தும் நோக்கில் ‘ராஜதந்திர’ முறையில் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் விஜய் முடிவெடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
இதையும் படிக்க: மேகதாது விவகாரத்தில் அடுத்தடுத்த அதிரடி.. பெங்களூரு செல்கிறார் முதல்வர் விஜய்… உச்ச நீதிமன்ற கதவுகளைத் தட்டவும் திட்டம்!
சட்டமன்றத் தீர்மானமும் தற்போதைய நிலைமையும்:
தமிழகத்தில் புதிய அரசு அமைந்த பிறகு நடைபெற்ற முதல் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே, மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டக் கூடாது என்றும் மத்திய அரசு அதற்கு எந்த அனுமதியும் வழங்கக் கூடாது என்றும் வலியுறுத்தி முதலமைச்சர் ஜோசப் விஜய் அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றினார். இருப்பினும், நடப்பு ஆண்டில் போதிய மழை பெய்யாததால் வறட்சி சூழல் உருவாகியுள்ளதைக் காரணம் காட்டி, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்குத் தேவையான குடிநீரையோ, பாசன நீரயோ திறக்க முடியாது எனப் பெங்களூரு நிர்வாகம் கறாராகத் தெரிவித்துவிட்டது.
எம்.ஜி.ஆர்., கருணாநிதி பாணியில் நடவடிக்கை:
காவிரி விவகாரத்தில் சட்டப்போராட்டம் ஒருபுறம் நடந்தாலும், மாநில முதல்வர்களிடையே நடைபெறும் நேரடிப் பேச்சுவார்த்தைகள் பல நேரங்களில் சாதகமான முடிவுகளைத் தந்துள்ளன. 1980-களில் எம்.ஜி.ஆர்: அன்றைய முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன் நேரடியாகக் கர்நாடக முதலமைச்சரைச் சந்தித்துப் பேசி நதிநீர் விவகாரத்தில் சுமுகத் தீர்வு காண முயன்றார்.
கலைஞர் கருணாநிதி – எடியூரப்பா: பெங்களூரில் திருவள்ளுவர் சிலையையும், சென்னையில் சர்வஞ்ஞர் சிலையையும் திறந்து இரு மாநில நல்லுறவை வலுப்படுத்தினர். ஜெயலலிதா – ஜெகதீஷ் ஷெட்டர்: உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவும் கர்நாடக முதல்வரை நேரில் சந்தித்துப் பேசினார். தற்போது, அதே பாணியைக் கையில் எடுத்துள்ள முதல்வர் விஜய், சட்டப் போராட்டத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் நேரடியாகக் கர்நாடக முதலமைச்சரைச் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளார்.
ஆகஸ்ட் 3 பயணம் – வேளாண்துறை அமைச்சர் உறுதி:
வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல்வர் விஜய் பெங்களூரு சென்று கர்நாடக முதல்வரைச் சந்திக்க உள்ளதாகத் தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் வினோத் உறுதிப்படுத்தியுள்ளார். இச்சந்திப்பில், மேகதாது அணை கட்டும் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தல், வறட்சி காலத்திலும் தமிழகத்தின் உரிமையின்படி நீர் திறக்கக் கோருதல், இரு மாநில எல்லைப் பிரச்சினைகள் உள்ளிட்ட பிற நிலுவை விவகாரங்கள் குறித்துச் சமரசப் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்.
இதையும் படிக்க: தூத்துக்குடி லாக்அப் டெத் சம்பவம்? சிசிடிவி ஆதாரத்துடன் காவல் துறை அதிரடி விளக்கம்.. முழு விவரம் என்ன!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ்நாடு முதலமைச்சர் ஒருவர் காவிரிப் பிரச்சினைக்காக நேரில் கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்த இருப்பது, இந்த விவகாரத்தில் ஒரு முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.