“அரசியலில் இருந்து மொத்தமாக விலகுகிறேன்”.. ராமதாஸ் அறிவிப்பு
PMK founder Ramadoss political retirement: மருத்துவர் ராமதாஸ் அரசியல் துறவறம் பாமக அன்புமணி வசம் மொத்தக் கட்சியையும் ஒப்படைப்பதாகத் தனது 88-வது பிறந்தநாளில் அதிரடியாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தீவிர உடல்நலக் குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக அரசியலிலிருந்து முற்றிலும் விலகும் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
விழுப்புரம், ஜூலை 25: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனருமான மருத்துவர் ராமதாஸ் தனது 88-வது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில், “இன்றோடு நான் அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன்; இனி பாமக-வில் அனைத்தும் அன்புமணி ராமதாஸ் தான் பார்த்துக்கொள்வார்” என அதிரடியாக அறிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கோனேரிகுப்பத்தில் உள்ள சரஸ்வதி கலைக் கல்லூரியில் மருத்துவர் ராமதாஸின் 88-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அன்புமணி ராமதாஸ், சௌமியா அன்புமணி மற்றும் கட்சி நிர்வாகிகள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் படிக்க: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் CM விஜய்.. காவிரிப் பிரச்சினைக்கு நேரடி பேச்சுவார்த்தை தீர்வாகுமா?
நிகழ்ச்சியில் மருத்துவர் ராமதாஸ்:
“இன்று முதல் நான் அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன். அரசியல் துறவறம் என்றால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது என்று பொருள். நான் அரசியலிலிருந்து முழுமையாக ஓய்வு பெறுகிறேன். இனி நான் அரசியல் பேச மாட்டேன். இதுக்கப்புறம் பாமகவின் அனைத்துக் கட்சிப் பணிகளையும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தான் பார்த்துக் கொள்வார்” என மாணவர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் வெளிப்படையாக அறிவித்தார்.
உடல்நிலை குறித்து உருக்கம்:
“உயிர் பிழைத்த நான், தலைச்சுற்றல் நோய் காரணமாக 20 நாட்கள் வரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். அந்தப் பாதிப்பு இன்றும் தொடர்கிறது. உங்களோடு பேச வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும் முழுமையாகப் பேச முடியாமல் சிரமப்படுகிறேன்” எனத் தனது உடல்நிலை குறித்தும் உருக்கமாகப் பேசினார்.
பாமக-வும் ராமதாஸின் அரசியல் பயணமும்:
இடஒதுக்கீடு போராட்டம்: 1980-களில் வன்னியர் சங்கம் மற்றும் 70-க்கும் மேற்பட்ட சமுதாய அமைப்புகளை ஒருங்கிணைத்து, வட மாவட்டங்களில் நடத்திய தீவிர இடஒதுக்கீடு போராட்டங்கள் மூலம் 1989-ல் பாட்டாளி மக்கள் கட்சியைத் தொடங்கினார். இவரது தொடர் போராட்டத்தின் விளைவாகவே தமிழகத்தில் ‘மிகவும் பிற்படுத்தப்பட்டோர்’ (MBC) என்ற தனிப் பிரிவு உருவாக்கப்பட்டு 108 சமூகங்களுக்கு இடஒதுக்கீடு பலன் கிடைத்தது. மது ஒழிப்புப் போராட்டங்கள், டாஸ்மாக் கடைகளை மூடக் கோரித் தொடரப்பட்ட வழக்குகள் மற்றும் சமூகநீதி அறிக்கைகள் மூலம் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராகத் திகழ்ந்தார்.
இதையும் படிக்க: “நான் அமைச்சர்தான்.. ஆனா எனக்குள்ளும் ஒரு ரசிகன் இருக்கான்!”.. திரையரங்கில் அழுத விவகாரத்தில் அமைச்சர் விக்னேஷ் நெகிழ்ச்சி விளக்கம்!
அரசியல் துறவறத்தின் பின்னணி:
கடந்த சில ஆண்டுகளாகக் பாமக தலைவராக யார் செயல்படுவது என்பது தொடர்பாகவும் கட்சி வழிகாட்டுதல் தொடர்பாகவும் ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தன. பெரும்பாலான நிர்வாகிகள் அன்புமணி ராமதாஸின் பக்கமே இருந்ததை உணர்ந்து கொண்ட ராமதாஸ், அண்மையில் அன்புமணியுடன் சமரசமானார். தற்போது 88 வயதை எட்டியுள்ள நிலையில், தீவிர உடல்நலக் குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக அரசியலிலிருந்து முற்றிலும் விலகும் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.