முதல்வர் மு.க.ஸ்டாலின் – துணை முதல்வர் உதயநிதி இன்ப சுற்றுலா.. தமிழிசை செளந்தரராஜன் விளாசல்!
Tamilisai Soundararajan:l தமிழகத்தில் வாக்களித்தவர்கள் வீட்டில் இருக்கும் நிலையில், ஓய்வின்றி ஆய்வு செய்ய வேண்டிய முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் ஓய்வுக்காக சுற்றுலா சென்றுள்ளதாக தமிழக பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை செளந்தர ராஜன் விமர்சனம் செய்தார்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23- ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலுக்காக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள், வேட்பாளர்கள் ஆகியோர் சுமார் ஒரு மாத காலம் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், தேர்தல்கள் முடிந்து நடத்தை விதிகள் திரும்பப் பெறப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களது குடும்பத்தினருடன் சுற்றுலா தலங்களுக்கு சென்றுள்ளனர். அந்த வகையில் முதல்வர் மு. க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று உள்ளார். இதேபோல, அவரது மகனும், தமிழகத்தின் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் அவரது குடும்பத்தினருடன் துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர் பாபு பழனி முருகன் கோவிலுக்கு ஆன்மீக சுற்றுலா சுற்றுலா சென்றுள்ளார்.
மு.க.ஸ்டாலின் சுற்றுலாவை தமிழிசை விமர்சனம்
இந்த நிலையில், முதல்வர் மு. க. ஸ்டாலின் மேற்கொண்டுள்ள சுற்றுலா குறித்து தமிழக பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவரான தமிழிசை சௌந்தர்ராஜன் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக கடும் வெயிலையும் பொருள்படுத்தாமல் நீண்ட வரிசையில் கால் கடுக்க நின்று வாக்களித்த வாக்காளர்கள் எங்கும் சுற்றுலா செல்லாமல் வீட்டில் தங்களது பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்!




திமுகவின் ஏற்றத்தாழ்வு வளர்ச்சி என தெரியவில்லை
ஆனால், 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டிய தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு ஓய்வெடுக்க சென்றுள்ளார். வாக்களித்து துணை நிற்கும் வாக்காளர்கள் அனைவரும் தங்களது அன்றாட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அயல்நாட்டு சுற்றுலா பயணத்தில் குடும்பத்தினருடன் ஈடுபட்டுள்ளார். அரசியல் என்பது அனைவருக்கும் சமமாகும். திராவிட முன்னேற்ற கழகத்தின் இந்த ஏற்றத்தாழ்வு மனப்பான்மை அவர்களின் வளர்ச்சிக்கானதாக தெரியவில்லை. வீழ்ச்சிக்காகவே தெரிகிறது.
ஓய்வின்றி ஆய்வு செய்ய வேண்டியவர்கள் ஓய்வுக்கு சென்றுள்ளனர்
மொத்தத்தில் ஓய்வின்றி ஆய்வு செய்ய வேண்டிய முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஓய்வுக்கு சென்றுள்ளனர். இதே கூட்டம் தான் அன்று ஒரு நாள் அரசு வேலையாக நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு சென்ற மறைந்த முன்னாள் முதல்வரும், பெருந்தலைவருமான காமராஜரை பார்த்து கும்பி எரியுது. குடல் வேகுது. குளு குளு ஊட்டி ஒரு கேடா என்று ஏளனமாக பேசி இருந்தனர். பொதுநலம் என்று பேசி வரும் திராவிட சுயநலவாதிகளை அனைத்து பொதுமக்களும் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் என்று அந்த பதிவில் தமிழிசை சௌந்தரராஜன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க: ஐஸ்கிரீமில் கலப்படம்? உணவு பாதுகாப்புத்துறை கடும் எச்சரிக்கை – என்ன நடந்தது?