பைக்கை திருடிய சிறுவன் உட்பட இருவர் கைது – சிசிடிவி காட்சிகள் வைரல்
கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை கண்ணார்பாளையம் அருகே சிறுவன் உட்பட 2 பேர் வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த பைக்கை லாக்கை உடைத்து லாவகமாக திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது. தற்போது 2 பேரும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
காரமடை, ஜூன் 3 : கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை கண்ணார்பாளையம் சாலையை சேர்ந்தவர் சரவணகுமார்(32).இவருக்கு திருமணமாகி சிந்து(29) என்ற மனைவி உள்ளார். சரவணகுமார் தனியார் வங்கிகளில் தங்க நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த மே, 29, 2026 அன்று வழக்கம் போல பணி முடித்து விட்டு வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு உறங்க சென்றுள்ளார். காலையில் எழுந்து பார்த்த போது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு போனது தெரிய வந்தது.
பைக்கை திருடிய சிறுவன் உட்பட இருவர் கைது
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்த போது நள்ளிரவு வேளையில் வீட்டின் முன்பு வந்த மர்ம நபர்கள் இருவர் லாக்கை லாவகமாக காலால் உடைத்து மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது.இதனை தொடர்ந்து அவர் இதுகுறித்து காரமடை காவல் நிலையத்தில் சிசிடிவி கேமரா காட்சிகள் ஆதாரத்துடன் புகாரளித்தார்.
இதையும் படிக்க : நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு – முன்விரோதம் காரணமா ? பரபரப்பு தகவல்




புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காரமடை போலீசார் மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற இருவரை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் ஜூன் 2, 2026 நேற்று மாலை காரமடை மேம்பாலத்தின் அடியில் எஸ்ஐ செந்தில்குமார் தலைமையில் காவலர் முத்தமிழரசன், தனிப்பிரிவு காவலர் சண்முகசுந்தரம் ஆகியோர் அடங்கிய குழுவினர் வழக்கம் போல வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியே வந்த இருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து காவல் நிலையம் அழைத்துச்சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில் பிடிபட்டவர்களில் ஒருவர் அவிநாசியை சேர்ந்த சரவணா(19) என்பதும், மற்றொருவர் 17 வயது சிறுவன் என்பதும், காரமடை கண்ணார்பாளையம் சாலையில் வசித்து வரும் சரவணகுமாரின் மோட்டார் சைக்கிளை திருடியவர்கள் என்பதும் தெரிய வந்தது.
இதையும் படிக்க : கோவையில் கொடூர ஹிட் அண்ட் ரன்: முதியவரை தூக்கி வீசிய கார்… வைரலாகும் சிசிடிவி!
இதனை தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே சரவணகுமார் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளின் லாக்கை காலால் லாவகமாக உடைத்து திருடிச்செல்லும் இருவர் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
எந்த பயமும் இல்லாமல் தைரியமாக 2 பேர் பைக்கை திருடி செல்லும் காட்சிகள் வெளியான நிலையில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக இருந்து வருகிறது.