திருச்சியில் செவிலியர் மாணவியின் மரணத்துக்கு தரமற்ற மருந்தே காரணம் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்
திருச்சியில் செவிலியர் மாணவி அறுவை சிகிச்சையின்போது மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவரது மரணத்துக்கு சிகிச்சையின்போது அளித்த தரமற்ற மருந்தே காரணம் என்ற மருத்துவர் குழு ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
திருச்சி, ஜூன் 3 : திருச்சியில் செவிலியர் மாணவி அறுவை சிகிச்சையின்போது மரணமடைந்த சம்பவத்தில் தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மாணவியின் மரணத்துக்கு தரமற்ற மருந்து தான் காரணம் என மருத்துவர்கள் குழு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. திருச்சியில் உள்ள அரசு செவிலியர் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு பயின்று வந்த சீதாலட்சுமி என்ற மாணவிக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் மூக்கு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த மே 22, 2026 அன்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டபோது திடீரென அந்த மாணவி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அந்த மாணவிக்கு தீவிர சிகிச்சை அளித்தும் அந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து மருத்துவர்களின் தவறான சிகிச்சையினால் மாணவி உயிரிழந்ததாக கூறி சக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அறுவை சிகிச்சையின் போது அதிக அளவு மயக்க மருந்து கொடுக்கப்பட்டதே அவரது மரணத்துக்கு காரணம் என மாணவிகள் குற்றம்சாட்டினர்.
இதையும் படிக்க : கோவையில் கொடூர ஹிட் அண்ட் ரன்: முதியவரை தூக்கி வீசிய கார்… வைரலாகும் சிசிடிவி!




மாணவியின் மரணத்துக்கு தரமற்ற மருந்தே காரணம்
இதனையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையின் முன் உறவினர்களும் மாணவிகளும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் மாணவியின் மரணம் குறித்து ஆய்வு செய்ய சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் கண்காணிப்பாளர் பாஸ்கர் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவில் காது மூக்கு தொண்டை நிபுணர் மருத்துவர் பாரதிமோகன், மருத்துவர்கள் சண்முகசுந்தரம் மற்றும் ஜெயபிரகாஷ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இந்த நிலையில் மாணவியின் மரணம் குறித்து அவர்கள் ஜூன் 3, 2026 அன்று ஆய்வு அறிக்கையை வெளியிட்டனர். அதில், மாணவிக்கு தரப்பட்ட டெக்சாம்மதாசோன் என்ற தரமற்ற மருந்து தான் அவரது மரணத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த மருந்தை அரசு மருத்துவமனைகளில் யாரும் பயன்படுத்த கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : காக்கி சட்டையில் ஒர் கருப்பு ஆடு.. புதுச்சேரியில் மனநலம் குன்றிய பெண் பாலியல் வன்கொடுமை.. இரவோடு இரவாக காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்!
இது தொடர்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உள்ள டெக்சாம்மெதாசோன் மருந்தின் குறிப்பிட்ட தயாரிப்பை ஆய்வுக்காக அனுப்பி வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் தற்போது பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளை நம்பியுள்ள பெரும்பாலான மக்களுக்கு இந்த தகவல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அரசு மருத்துவமனைகளில் அவ்வப்போது முறையான ஆய்வு நடத்தி, மக்களுக்கு தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.