வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட டெலிவரி பாய் – பரபரப்பு சம்பவம்
சென்னையில் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்த பெண்ணுக்கு பொருளை அளிக்க வந்த டெலிவரி பாய் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து கொண்டு தண்ணீர் கேட்பது போல நடித்து இந்த செயலில் அவர் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்தது.
சென்னை, ஜூன் 3 : சென்னை அமைந்தகரை பகுதியில் டெலிவரி பாய் ஒருவர் தண்ணீர் கேட்பது போல் வந்து பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மே 31, 2026 அன்று சென்னை அமைந்தகரை பகுதியில் பெண் ஒருவர் ஆன்லைன் ஷாப்பிங் மூலம் வீட்டு உபயோக பொருட்களை ஆர்டர் செய்துள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணின் வீட்டுக்கு வந்த டெலிவரி பாய் பார்சலை கொடுத்துள்ளார். பின்னர் அந்த பெண் தனியாக இருப்பதை அறிந்து கொண்ட அந்த நபர் தண்ணீர் கேட்டுள்ளார்.
பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட டெலிவரி பாய்
இந்த நிலையில் தண்ணீர் எடுத்து வர அந்த பெண் வீட்டிற்குள் சென்ற நிலையில் டெலிவரி பாயும் அவர் பின்னால் சென்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண் டெலிவரி பாயிடம் கேள்வி எழுப்பினார். ஆனால் அவரின் கேள்விக்கு பதிலளிக்காமல் திடீரென அந்த இளைஞர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. உடனே அப்பெண் கத்தி கூச்சலிடவே ஊடனடியாக அந்த டெலிவரி பாய் அங்கிருந்து தப்பியோடியிருக்கிறார்.
இதையும் படிக்க : நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு – முன்விரோதம் காரணமா ? பரபரப்பு தகவல்




இதனையடுத்து அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை காவல் நிலைய போலீசார் டெலிவரி பாய் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இது தொடர்பாக அவர் ஆர்டர் செய்த டெலிவரி நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், டெலிவரி பாயாக வந்தவர் சென்னை அயனாவரத்தை சேர்ந்த லோகேஷ் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவரது செல்போன் எண்ணை வைத்து அவரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அந்த இளைஞர் அயனாவரம் பகுதியில் இருப்பதை அறிந்து அங்கு வைத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிக்க : கோவையில் கொடூர ஹிட் அண்ட் ரன்: முதியவரை தூக்கி வீசிய கார்… வைரலாகும் சிசிடிவி!
சமீப காலமாக ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்து வாங்குவது ஒரு சாதாரண பழக்கமாக மாறிவிட்டது. இன்றைய அவசர உலகில் பலருக்கும் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்க நேரம் இல்லாத காரணத்தால் கடைகளில் சென்று பொருட்களை வாங்குவது சவாலாக மாறி வரும் நிலையில் இது போன்ற டெலிவரி செயலிகள் மக்களுக்கு பெரிதும் கைகொடுக்கின்றன. இந்த நிலையில் டெலிவரி பாய் ஒருவர் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.