மேகதாது அணை திட்டத்துக்கு முற்றிலும் தடை.. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மீண்டும் அதிரடி மனு!
TN Govt File New Petition For Mekedatu Dam : கர்நாடக மாநிலத்தில் காவரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற பகுதியில் அம் மாநில அரசு அணை கட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு முற்றிலும் தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது. கர்நாடக மாநிலத்தில், பெங்களூரு நகரத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்தில் விவசாயம் வெகுவாக பாதிக்கப்படும் எனவும், டெல்டா பகுதிகளுக்கு தேவையான தண்ணீர் கிடைக்காது என்றும் தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் தான், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது என்றும், இது தொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணையம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என்றும், அணைக்கட்டும் முயற்சிக்கு முற்றிலும் தடை விதிக்க கோரி தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்துள்ளது.
மேகதாது அணை கட்ட தடையில்லை
மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கு வரவேண்டிய காவிரி நீர் வராது எனவும், இதனால் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் கோடிக்கணக்கான மக்களின் குடிநீர் தேவை பெரும் கேள்விக்குறியாக என்றும் பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். அண்மையில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு மேகதாது அணை கட்டுவதற்கு எந்த தடையும் இல்லை என்று தெரிவித்திருந்தது. இதன் காரணமாக தமிழக அரசு புதிய மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து வரும்.
மேலும் படிக்க: எடப்பாடி அளித்த பதவிகள் தேவையில்லை.. எஸ்.பி. வேலுமணி திடீர் போர்க்கொடி!




ஒரே மாதத்தில் இரு முறை நடந்த காவிர் மேலாண்மை கூட்டம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், தமிழகத்துக்கான ஜூன், ஜூலை மாதத்துக்கான காவிரி நீரை திறந்து விட வேண்டும் என்று கர்நாடகா அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்த உத்தரவை கர்நாடக அரசு நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டு வைத்தது. இதனிடையே, அண்மையில் மீண்டும் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில், கர்நாடகம் மற்றும் தமிழகத்தை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்று இருந்தனர்.
4 டிஎம்சி நீர் வழங்க உத்தரவிட்டும் பயனில்லை
இதில், காவிரி நீர் ஒழுங்காற்று குழு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தமிழகத்திற்கான காவிரி நீரை திறந்து விட வேண்டும் எனவும், அதன்படி, வினாடிக்கு 3500 கன அடி என மொத்தம் 4 டி. எம். சி. தண்ணீரை 15 நாட்கள் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தத. ஆனால், தற்போது வரை அந்த நீர் திறந்து விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: அரசுப் பள்ளியில் மாணவர்கள் தவெக.. தவெக.. என கோஷம்.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்!