ஆளுநர் செயலர் முதல் மாவட்ட ஆட்சியர்கள் வரை… தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
Top IAS Transfers : தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகளை பல்வேறு பணியிட மாற்றங்களை செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் ஆளுநர் மாளிகை செயலர், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
சென்னை, ஜூன் 2 : தவெக அரசு பதவியேற்றதில் இருந்து அரசு நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக ஜூன் 2, 2026 இன்றும் பல்வேறு பணியிட மாற்றங்களை செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் ஆளுநர் மாளிகை செயலர், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
மாவட்ட ஆட்சியர் மாற்றம்
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலராக பணியாற்றி வந்த சஜன் சிங் ஆர்.சவான் ஆளுநரின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக வெளியிடப்பட்ட உத்தரவுகளில் திருத்தம் செய்யப்பட்ட நிலையில், தேனி மாவட்ட ஆட்சியராக இருந்த ரஞ்சித் சிங், ஐஏஎஸ், தென்காசி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க : ஜூன் 4ல் பள்ளிகள் திறக்கப்படுமா? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்




சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த ரஷ்மி சித்தார்த் ஜகடே உயர்கல்வித்துறையின் சிறப்புச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். நில நிர்வாக ஆணையர் மற்றும் முதன்மை செயலராக ஹர் சஹாய் மீனா மாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாடு சிமெண்ட் கழக நிர்வாக இயக்குநர் அஜய் யாதவ் பால்வளத் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேசமயம் அவர் ஆவின் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் கூடுதல் பொறுப்பு வகிக்க உள்ளார்.
தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிர்வாக இயக்குநர் டாக்டர் ஜெ. விஜயராணிதோட்டக்கலை மற்றும் பயிர் வளர்ப்பு துறை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். இதுவரை அந்தப் பொறுப்பில் இருந்த பி. குமரவேல் பாண்டியன் மாநில திட்டக்குழுவின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அரியலூர் ஆட்சியராக இருந்த பி. ரத்தினசாமி தொழில்நுட்ப கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி முன்னாள் ஆட்சியர் டாக்டர் ஆர். சுகுமார் அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க : பரந்தூர் விமான நிலையம்… முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்க திட்டம்.. என்ன முடிவெடுக்கப் போகிறார் விஜய்!
தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிர்வாக இயக்குநராக ஏ. ஜான் லூயிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் துணைத் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக டி. அன்பழகன் நியமிக்கப்படுகிறார். தமிழ்நாடு சிமெண்ட் கழக நிர்வாக இயக்குநராக டாக்டர் ஜே.யு. சந்திரகலா,பொறுப்பேற்கிறார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்த எஸ். சரவணன் சென்னை மாநகராட்சியின் இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி துணை ஆணையர் எம். பிரிதிவிராஜ் கரூர் மாநகராட்சி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். எல்காட் நிறுவன நிர்வாக இயக்குநர் வி. தீபனவிஸ்வேஸ்வரி தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சிதம்பரம் துணை ஆட்சியர் எஸ். கிஷன் குமார் கடலூர் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வந்த துணை ஆட்சியர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைகள் மற்றும் சிறப்பு வளர்ச்சி திட்டங்களில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் திட்ட அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.