பரந்தூர் விமான நிலையம்… முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்க திட்டம்.. என்ன முடிவெடுக்கப் போகிறார் விஜய்!
Parandur Airport Plan : பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக அறிக்கையை முதல் அமைச்சர் ஜோசப் விஜய்யிடம் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக விமான நிலைய ஆணையத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இந்த விமான நிலையம் காலத்தின் கட்டாயம் எனவும் குறிப்பிட்டுள்ளனர் .
சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் தினந்தோறும் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் 400- க்கும் மேற்பட்ட விமானங்கள் வந்து செல்கின்றன. இதனால், இந்த விமான நிலையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எதிர்காலத்தில் விமான பயணிகளின் எண்ணிக்கையை சமாளிப்பதற்காக பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான திட்டம் கொண்டுவரப்பட்டது. அங்கு பரந்தூர் விமான நிலையத்துடன் சேர்த்து நவீன சரக்கு கிடங்குகள், ஏற்றுமதி, இறக்குமதி மையங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள், நட்சத்திர உணவகங்கள் ஆகியவை அடங்கிய ஏரோட்ரோபோலிஸ் நகரத்தை அமைக்க திட்டமிடப்பட்டது. இதன் மூலம் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களின் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்துக்காக ஏற்கனவே சுமார் 3,700 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு விஜய் எதிர்ப்பு
இந்த நிலையில், மீதமுள்ள சுமார் 1,700 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த திட்டத்திற்கு பரந்தூர் பகுதி விவசாயிகள் மற்றும் மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்சி தொடங்கிய விஜய் பரந்தூர் மக்களுக்கு ஆதரவாக பரந்தூரில் விமான நிலையம் வராது என்று விவசாயிகளுக்கு உறுதி அளித்தார். தற்போது, தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்த நிலையில் பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும் படிக்க: பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. முதல்வர் விஜய் பொறுப்புடன் செயல்படுவது எப்போது.. கனிமொழி எம்.பி. கேள்வி!




1,700 ஏக்கர் நிலைத்தில் சிப்காட் அமைக்க திட்டம்
இது தொடர்பாக முதல்வர் விஜய் மேற்கொண்ட ஆலோசனையில் 1,700 ஏக்கர் நிலத்தில் சிப்காட் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் மற்றொரு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் அதிகாரிகளுடன் சேர்ந்து பரந்தூர் விமான நிலையத்தின் அவசியம் கருதி விமான நிலைய ஆணைய அதிகாரிகள் ஆய்வு அறிக்கை தயார் செய்துள்ளனர். இந்த அறிக்கையை விரைவில் முதல்வர் விஜய்யிடம் அதிகாரிகள் சமர்ப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் விஜய்யிடம் அறிக்கை சமர்ப்பிக்க திட்டம்
சென்னையில் 2- ஆவது விமான நிலையம் என்பது காலத்தின் கட்டாயம் ஆகும். இதற்காகவே பரந்தூர் விமான நிலையத்தை பரிந்துரை செய்துள்ளோம். இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்களை இயக்க முடியும். இதன் மூலம் சுமார் 50 ஆண்டுகளுக்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் விமான நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கான அனைத்து ஆய்வுகளையும் முடித்து அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி கோரி முதல்வர் விஜய்யை விரைவில் சந்திக்க உள்ளோம் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க: திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் திருமாவளவன் போட்டியா? அவரே அளித்த பரபரப்பு விளக்கம்