கோவையில் திடீரென மோப்ப நாயுடன் களமிறங்கிய போலீஸ் படை.. ஆம்னி பேருந்துகள் சல்லடை சல்லடையாக அலசல்.. என்ன காரணம்!
Coimbatore Police Drug Raids : கோயம்புத்தூர் மாவட்டத்தில் போதைப் பொருள்கள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த தனியார் ஆம்னி பேருந்துகளில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும், பார்சல் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது.
தமிழகத்தில் போதைப் பொருட்களின் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. போதை பொருட்கள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில் வெளி மாநிலங்களில் இருந்து வந்த தனியார் ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில் மோப்பநாய்களுடன் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டம் முற்றிலும் குறைக்கப்படும் என்று முதல் அமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்திருந்த நிலையில், இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
போதைப் பொருள்கள் பறிமுதல் செய்து அழிப்பு
கோயம்புத்தூரை தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை போலீசார் தீயிட்டு அழித்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் தலைமையில் ஆய்வு கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில், போதைப் பொருள்கள் ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப் படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
மேலும் படிக்க: திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் திருமாவளவன் போட்டியா? அவரே அளித்த பரபரப்பு விளக்கம்




வெளிமாநில ஆம்னி பேருந்துகளில் திடீர் சோதனை
அதன்படி இன்று கர்நாடகம், கேரளம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து கோவை மாவட்டத்திற்கு உள்ள ஆம்னி பேருந்துகளில் மோப்பநாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தி இருந்தனர். இதில், பேருந்தில் பயணம் செய்த அனைத்து பயணிகளின் உடைமைகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாய்களுடன் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டிருந்தனர். அப்போது, தனியார் பேருந்துகளின் ஓட்டுநர்கள் மற்றும் க்ளீனர்கள் ஆகியோரிடம் போதை பொருள்கள் பார்சல்களை பேருந்தில் கொண்டு வருவதற்கு அனுமதிக்க கூடாது என்று அறிவுறுத்தல் வழங்கினர்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப் பொருள் கலாசாரம்
தமிழகத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் தங்கு தடையின்றி விற்பனையாகி வருகிறது. இதனை சிறுவர்கள் முதல் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் உபயோகப்படுத்தி வருகின்றனர். இதனை பயன்படுத்துவதால் ஏற்படும் போதையின் காரணமாக பல்வேறு குற்ற சம்பவங்களில் தன்னிலை இன்றி ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக, தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனை, போதை பொருட்கள் கடத்தல், போதை பொருட்கள் நுழைவு ஆகியவற்றை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது.
மேலும் படிக்க: தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை.. மாநில தகவல் ஆணையர் அதிரடி உத்தரவு!