வார இறுதி நாட்கள்.. நாளை முதல் 1,635 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. முன்பதிவு செய்வது எப்படி?
இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 6,487 பயணிகளும், சனிக்கிழமை அன்று 2,387 பயணிகளும், ஞாயிற்றுக்கிழமை அன்று 7,089 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். தொலைதூரப் பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் TNSTC மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஜூலை 23, 2026: தமிழகத்தில் வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை மற்றும் பிற முக்கிய நகரங்களில் இருந்து கிட்டத்தட்ட 1,635 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாளர் ஜெரோலின் லிஸ்பன் சிங் தெரிவித்துள்ளார். பயணிகள் கூட்டத்தைப் பொறுத்து தங்களது பயணங்களைத் திட்டமிட்டுக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் முக்கியப் பங்காற்றி வருகிறது. பொதுவாக விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்கள் அல்லது வார இறுதி நாட்களை முன்னிட்டு, மக்களின் தேவைக்கேற்ப சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். இந்த சிறப்புப் பேருந்துகள் மூலம் மக்கள் சிரமமின்றி தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியும்.
நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்:
இந்தச் சூழலில், வரக்கூடிய வார இறுதி விடுமுறை நாட்களை ஒட்டி தமிழகத்தில் சிறப்புப் பேருந்துகள் ஜூலை 24ஆம் தேதி முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “24.07.2026 (வெள்ளிக்கிழமை), 25.07.2026 (சனிக்கிழமை) மற்றும் 26.07.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும், பிற இடங்களிலிருந்து சென்னைக்கும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
எந்தெந்த நாட்களில் எத்தனை பேருந்துகள்?
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 24.07.2026 (வெள்ளிக்கிழமை) அன்று 395 பேருந்துகளும், 25.07.2026 (சனிக்கிழமை) அன்று 330 பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 24.07.2026 (வெள்ளிக்கிழமை) மற்றும் 25.07.2026 (சனிக்கிழமை) ஆகிய இரு நாட்களிலும் தலா 120 பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: “தமிழகத்திலும் ஆசிரியர் நியமனத் தேர்வில் வினாத்தாள் கசிந்தது!”.. மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு!!
மேற்கூறிய இடங்களிலிருந்தும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
1,635 சிறப்பு பேருந்துகள் இயக்கம்:
மாதவரத்திலிருந்து 24.07.2026 மற்றும் 25.07.2026 ஆகிய நாட்களில் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, போளூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு தினமும் 25 சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தொடரும் மழை.. எத்தனை நாட்களுக்கு? வெப்பநிலை எப்படி இருக்கும்?
மேலும், ஞாயிற்றுக்கிழமை அன்று சொந்த ஊர்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்புவதற்கு வசதியாக, பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 26.07.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று 420 சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்வது எப்படி?
இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 6,487 பயணிகளும், சனிக்கிழமை அன்று 2,387 பயணிகளும், ஞாயிற்றுக்கிழமை அன்று 7,089 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், தொலைதூரப் பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் TNSTC மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்தச் சிறப்புப் பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியைப் பயன்படுத்தி தங்களது பயணத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.