பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை.. தவெக நிர்வாகிகள் இருவர் கைது.. தூத்துக்குடியில் பரபரப்பு சம்பவம்!
Thoothukudi Women Gang HAarassment : தூத்துக்குடி மாவட்டத்தில் பெண்ணுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி காரில் அழைத்து சென்று மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் இளம்பெண். இவரிடம் தூத்துக்குடி மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக்கழக இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட தமிழக வெற்றிக்கழக நிர்வாகி ஜெயபால் ஆகியோர் வேலை வாங்கி தருவதாக கூறியதாக தெரிகிறது. இதை நம்பிய அந்தப் பெண் அவர்கள் அழைத்ததன் பேரில், காரில் தனியாக சென்றுள்ளார். அப்போது, அந்த பெண்ணிடம் மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளனர். அதனை அந்த பெண் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் மயங்கிய அந்த பெண்ணை ஆள் அரவம் இல்லாத இடத்துக்கு காரில் அழைத்து சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து, அந்த பெண்ணை அந்தப் பகுதியிலேயே இறக்கிவிட்டு சென்றுள்ளனர்.
பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த தவெக நிர்வாகிகள்
பின்னர், சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்த அந்த பெண் தனக்கு நேர்ந்த சம்பவத்தை உணர்ந்ததுடன் அங்கிருந்து உடனடியாக தப்பி சென்று ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இதில், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளான பாலமுருகன் மற்றும் ஜெயபால் ஆகியோரை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில், அந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டது.
மேலும் படிக்க: திமுக கூட்டணியில் தொடருமா மதிமுக? துரதிஷ்டவசமாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டோம்.. துரை வைகோ சொன்ன டிவிஸ்ட்..




தவெக நிர்வாகிகள் இருவர் கைது
இதைத் தொடர்ந்து, இருவரையும் கைது செய்த ஸ்ரீவைகுண்டம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடி படை நியமிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது.
தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பு
இந்த நிலையிலும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த குற்ற சம்பவங்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கவில்லை என்றும் அரசியல் கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த இரு நிர்வாகிகள் ஒரு பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க: BLACK & WHITE கோட் சூட் ஏன் போடுகிறேன்.. விளக்கம் அளித்த முதல்வர் விஜய்..