கனவாகி போன கல்லூரி படிப்பு.. உயிரை மாய்த்து கொண்ட பிளஸ் 2 மாணவி.. தீரா துயரில் பெற்றோர்!
Krishnagiri Student Suicide; கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு கல்லூரியில் படிக்க இடம் கிடைக்காததால் பிளஸ் 2 முடித்த மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடி பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. கூலி தொழில் பார்த்து வரும் இவருக்கு பூஜா ( 17 வயது) என்ற மகள் இருந்தார். இவர், அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார். தற்போது, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், ஓசூர் அரசு கலைக் கல்லூரியில் சேர்வதற்காக விண்ணப்பித்திருந்தார். ஆனால், அவரது மதிப்பெண்கள் குறைவாக இருந்த காரணத்தால் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், பூஜா மனமுடைந்த நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வந்தனர். அத்துடன், இந்த கல்லூரி இல்லை எனில் வேறு கல்லூரியில் இடம் கிடைத்தால் அங்கு சேர்த்து படிக்க வைப்பதாக தெரிவித்து வந்தனர். ஆனால், அரசு கல்லூரியில் இடம் கிடைக்காதது பூஜாவுக்கு மிகப்பெரிய வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியதாக தெரிகிறது.
மின்விசிறியில் தூக்கு போட்ட மாணவி
இதனால், மிகவும் மன வேதனை அடைந்த பூஜா தற்கொலை முடிவை கையில் எடுத்துள்ளார். அதன்படி, சம்பவத்தன்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நிலையில் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தொங்கினார். வெளியே சென்றிருந்த அவரது தந்தை வீடு திரும்பிய போது பூஜாவின் நிலையே பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் உடனடியாக வீட்டுக்கு வந்து தூக்கில் இருந்து பூஜாவை மீட்டனர்.
மேலும் படிக்க: இரு உயிர்களை பறித்த கள்ளக்காதல்.. புதுச்சேரியில் கர்ப்பிணி அடித்து கொலை.. பரபரப்பு பின்னணி!




தீவிர சிகிச்சையில் உயிரிழந்த மாணவி
தொடர்ந்து, அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, மருத்துவர்கள் முதலுதவி அளித்துவிட்டு மேல் சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, மாணவி பூஜாவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த சிறிது நேரத்தில், சிகிச்சை பலன் இன்றி பூஜா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக அனுப்பி வைத்தனர்.
சிப்காட் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை
தொடர்ந்து, பூஜாவின் தந்தை சின்னசாமி அளித்த புகாரின் பேரில், சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு கல்லூரியில் சேர்வதற்காக விண்ணப்பித்திருந்த மாணவிக்கு இடம் கிடைக்காத காரணத்தால் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: கல்யாண கனவு கலைந்தது.. காதலியுடன் மோதல்.. திருவள்ளூரில் இளைஞர் செய்த அதிர்ச்சி காரியம்!