திருச்செந்தூர் முருகன் கோயிலில் விசாரணை குழு அமைப்பு.. ஜூன் 20-க்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு..!
Tiruchendur Murugan Temple Investigation Committee: திருச்செந்தூர் முருகன் கோயிலில் விசாரணை மேற்கொண்டு ஆய்வறிக்கை சமர்ப்பிப்பதற்காக விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு ஆய்வு மேற்கொண்டு வரும் ஜூன் 20- ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க அமைச்சர் ரமேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அன்னதானத் திட்டம், பக்தர்கள் தங்கும் விடுதி முன்பதிவு மற்றும் கோயில் நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக விசாரணை குழுவை இந்து சமயம் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த குழுவில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் டி.ஜி. வினய் தலைமையில் இணை ஆணையர் ஜெயப்பிரியா, துணை ஆணையர் தங்கம், உதவி ஆணையர் பாஸ்கரன், முதுநிலை கணக்கு அலுவலர் கார்த்திகேயன், ராமேஸ்வரம் கோயில் மேலாளர் பகவதி, திட்ட பொறியாளர் மாயக்கண்ணன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதான திட்டத்தின் தரம் மற்றும் அதன் செயல்பாடுகள், கோவிலுக்கு சொந்தமான விடுதிகளில் பக்தர்கள் தங்குவதற்கான அறைகள் முன்பதிவு நடைமுறைகள் உள்ள குறைபாடுகள் உள்ளிட்டதை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
கோவில் நிர்வாக செயல்பாடுகள் சீரமைக்கும் பணி
கோவில் நிர்வாகம் தொடர்பான அனைத்து செயல்பாடுகளையும் சீரமைக்கும் வகையில் இந்த விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த குழுவினர் விரைவில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இந்த குழுவுக்கு தேவையான அனைத்து உதவிகள் மற்றும் வசதிகளை செய்து தர வேண்டும் என்று திருச்செந்தூர் கோவில் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலருக்கு அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆய்வுப் பணிகள் தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் நிர்வாகம் உறுதியாக உள்ளது.
மேலும் படிக்க: மரணக்குழியான மேம்பாலப் பணி? கோவை தண்ணீர் பந்தலில் பெரும் பள்ளத்தில் விழுந்த நபர்!




திருச்செந்தூர் கோயிலில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்
கடந்த மே 29- ஆம் தேதி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திருச்செந்தூர் கோவிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, விஐபி தரிசனம் மேற்கொள்வதற்காக அவரிடம் ரூ.4 ஆயிரத்தை கையூட்டாக அர்ச்சகர் பெற்றிருந்தார். இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இதைத் தொடர்ந்து, பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் தெரிவித்திருந்தார்.
ஜூன் 20- ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
அந்த வகையில் தற்போது விசாரணை குழு அமைக்கப்பட்டு கள ஆய்வு மேற்கொண்டு அதற்கான விரிவான அறிக்கையை வரும் ஜூன் 20- ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை குழு அமைப்பு என்பது திருச்செந்தூர் கோவில் நிர்வாகத்தில் வெளிப்படை தன்மையை உருவாக்குவதற்கும், பக்தர்களின் வசதியை மேம்படுத்துவதற்கும் எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: ராஜ்யசபா இடைத்தேர்தல்: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி வேட்பு மனு தாக்கல்!