ரூ.1,020 கோடி ஊழல் புகார்? முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு.. களமிறங்கிய லஞ்ச ஒழிப்பு துறை!
Anti Corruption Register Case K. N. Nehru: நகராட்சி நிர்வாகத்துறையில் ரூ.1,020 கோடி ஊழல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் அந்த துறையின் முன்னாள் அமைச்சராக இருந்த கே. என். நேரு மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் சுமார் ரூ.1,020 கோடிக்கு ஊழல் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, மாநில லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்யுமாறு அமலாக்கத்துறை பல்வேறு ஆதாரங்களுடன் கடிதம் அனுப்பி இருந்தது. ஆனால், இது தொடர்பான நடவடிக்கை தாமதப்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் தேர்தலுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், நகராட்சி மற்றும் நிர்வாகத் துறையின் அமைச்சராக இருந்த கே. என். நேரு மீது வழக்கு பதிவு செய்யுமாறு லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில், தற்போது முன்னாள் அமைச்சர் கே. என். நேரு மீது மாநில லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நகராட்சி நிர்வாகத்துறையில் ரூ.1,020 கோடி ஊழல்
நகராட்சி மற்றும் நிர்வாகத்துறை அமைச்சராக கே. என். நேரு இருந்த காலகட்டத்தில் பணி நியமனங்கள் ஆகியவற்றுக்கு ரூ.1,020 கோடி வரை லஞ்சம் பெறப்பட்டதாகவும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்யுமாறு தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பி இருந்தது. இந்த கடிதத்தை அப்போதைய தமிழக முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு டிஜிபி அனுப்பி வைத்திருந்தார். இந்த கடிதத்தின் மீது தமிழக அரசு மற்றும் தமிழக டிஜிபி ஆகியோர் நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர்.
மேலும் படிக்க: பெரம்பூர் ரயில் நிலையத்தில் தலையில்லாமல் மீட்கப்பட்ட ஆண் சடலம்.. தீவிர விசாரணையில் இறங்கிய போலீஸ்..




லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவின் பின்னணி
இதனிடையே, இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி முன்னாள் அமைச்சர் நேரு மீது வழக்கு பதிவு செய்யுமாறு லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், அந்த உத்தரவு மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் கே. என். நேரு மீது மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ய வாய்ப்பு
அதன் அடிப்படையில், கே. என். நேரு மீதான குற்றச்சாட்டு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விரைவில் விசாரணையை தொடங்கும் என்று தெரிகிறது. மேலும், இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறையும் கூடுதலாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது. இதில், குற்றச்சாட்டுகள் உறுதியாகும் நிலையில் முன்னாள் அமைச்சர் கே. என். நேரு மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
மேலும் படிக்க: “ரஜினிகாந்த் அழைப்பை மறுத்து மன்னிப்பு கேட்டேன்”.. ரகசியம் உடைத்த அண்ணாமலை!!