அண்ணாமலை போடுவது மாரீச மான் வேடமாகும்.. இதை தமிழக மக்கள் அறிவர்.. பெ.சண்முகம் விமர்சனம்!
Marxist Shanmugam Criticizes Annamalai : பாரதீய ஜனதா கட்சியில் இருந்த அண்ணாமலை விலகியதை மாரீச மான் வேடம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் விமர்சித்துள்ளார். இந்த நாடகத்தை மக்கள் அறிவர் என்று குறிப்பிட்டு உள்ளார்.
தமிழக பாரதிய ஜனதா கட்சியில் மாநிலத் தலைவராக இருந்தவர் அண்ணாமலை. இவர், சில காரணங்களால் அந்த கட்சியில் இருந்து விலகுவதாக பாஜக தேசிய தலைவர் நிதின் நபீனிடம் ராஜினாமா கடிதத்தை அளித்திருந்தார். இது தொடர்பாக அண்ணாமலையிடம் பாஜக தலைமை பல்வேறு கட்ட சமரச பேச்சுவார்த்தை நடத்தி இருந்தது. ஆனால், கட்சியில் இருந்து விலகுவதாக அண்ணாமலை தீர்க்கமாக முடிவெடுத்ததாக தெரிவித்தார். அதன் அடிப்படையில், அண்ணாமலையின் ராஜினாமா கடிதத்தை பாஜக தலைமை ஏற்றதாக இன்று அறிவிப்பு வெளியானது. இதைத் தொடர்ந்து, புதிய இயக்கம் தொடங்குவதாக அண்ணாமலை தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் புதிய உத்தி
தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியின் பெயர் மாற்றம், தமிழகத்தில் பாஜகவின் புதிய உத்தியாக உள்ளது. ஏற்கனவே ஆர். எஸ். எஸ். 2.500 அமைப்புகளை வழி நடத்தி வருகிறது. தற்போது, அண்ணாமலை தொடங்கும் அமைப்பும் 2,501 அவ்வளவு தான். பாரதிய ஜனதா கட்சி என்ற கட்சி தமிழக மக்களிடம் எடுபடவில்லை. எனவே, கட்சியின் பெயரை மாற்றி வியாபாரத்தை வெற்றிகரமாக்க முடியுமா என்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆசியுடன் அண்ணாமலை முயற்சித்து வருகிறார்.
மேலும் படிக்க: இன்று இயக்கம்.. நாளை கட்சி.. அடுத்த தேர்தலில் நிச்சயம் போட்டி – அண்ணாமலை மாஸ்டர் பிளான்!




அண்ணாமலை போடுவது மாரீச மான் வேடம் ஆகும்
அண்ணாமலை தனி இயக்கம் ஆரம்பித்த 2 மணி நேரத்தில் 2.50 லட்சம் பேர் சேர்ந்து இருப்பதாக கூறுவது பாரதிய ஜனதா கட்சியினர் இணைக்கப்படுகிறார்கள் என்பதே அர்த்தம் ஆகும். எனவே, அண்ணாமலை போடுவது மாரீச மான் வேடம் ஆகும் என்பதை தமிழக மக்கள் நன்றாக அறிவார்கள் என்று தெரிவித்தார். பாரதிய ஜனதா கட்சியில் சுமார் 6 ஆண்டுகள் பயணித்து வந்த அண்ணாமலை தனது ராஜினாமா கடிதத்தை அளித்து, கட்சியில் இருந்து விலகி உள்ளார்.
அரசியல் கட்சியின் தலைவர்கள் விமர்சனம்
அத்துடன் புதிய இயக்கத்தை தொடங்கி அரசியலை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார். இவரது கருத்து மற்றும் அரசியல் நகர்வுகளை பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் மத்திய அமைச்சரும், எம்பியுமான ஆ. ராசா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதே போல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலர் சண்முகமும் தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார். மேலும், பல கட்சிகளின் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: ஜூன் 18 முதல் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் கூடுகிறது.. ஆளுநர் உரையுடன் தொடக்கம்!!