அண்ணாமலைக்கு அணிலாக உதவி செய்வோம்.. பாஜகவில் இருந்து விலகிய கரு. நாகராஜன் அதிரடி முழக்கம்!
Karu Nagarajan: தமிழகத்தில் அண்ணாமலை இயக்கத்தில் இணைந்தது முதல் அணிலாக செயல்படுவோம் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் தெரிவித்தார். பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை இயக்கத்தில் இணைந்த நிலையில் இந்த கருத்தை தெரிவித்து உள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியில் இருந்து அண்ணாமலை விலகியதை தொடர்ந்து, பலரும் அந்த கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். அந்த வகையில், தமிழக பாஜக மாநில துணைத் தலைவராக இருந்த கரு. நாகராஜன், மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன் ஆகியோர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தங்களை விலக்கிக் கொள்வதாக தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, கரு. நாகராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒரு குடும்பத்தில் எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் உருவாகினால் அடுத்த முறை மற்றொருவற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். நிரந்தரமாக ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் அந்த பதவிகளை வைத்திருக்கக் கூடாது என்பதன் அடிப்படையில் புதிய அமைப்பை அண்ணாமலை உருவாக்கி உள்ளார். இந்த அமைப்பில் சுமார் 7 லட்சத்துக்கும் மேலான மக்கள் தாமாக முன்வந்து இணைந்து கொண்டிருக்கின்றனர்.
அண்ணாமலைக்கு அணிலாக உதவி செய்வோம்
அவ்வாறு தமிழக மக்களின், இளைஞர்களின், பெண்களின் ஆதரவு உடைய அண்ணாமலைக்கு நாங்களும் அணில் போன்று உதவி செய்வதற்காக பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி அவருடைய இயக்கத்தில் இணைந்துள்ளோம். தமிழக மக்கள் எதிர்பார்க்கும் அறிவு சார்ந்த தலைமை அண்ணாமலையிடம் மட்டுமே உள்ளது. ஆற்றல் மிக்க தலைவராகவும், குக் கிராமங்கள் வரை பாரதிய ஜனதா கட்சியை கொண்டு சென்றவர் அண்ணாமலை தான். டெல்லியில் இருந்து வரும் தலைவர்கள் இங்கு பேசுவதை மக்கள் புரிந்து கொள்வது இல்லை.
மேலும் படிக்க: ராஜ்யசபா இடைத்தேர்தல்: பிரவீன் சக்கரவர்த்தி வேட்பு மனு தாக்கல்!




துணிச்சலான நபரை தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர்
அண்ணாமலைக்கு சமூக வலைதளங்களில் அதிக அளவிலான ஆதரவாளர்கள் இருந்து வருகின்றனர். அனைத்து துறைகளிலும் துணிச்சலாக பேசக்கூடிய நபர் தான் அண்ணாமலை. இவரை போன்றவர்களை தான் தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்று தெரிவித்தார். பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபினிடம் தனது ராஜினாமா கடிதத்தை அண்ணாமலை வழங்கி இருந்தார். அதன்படி அவரது ராஜினாமா கடிதத்தை பாஜக தலைமை ஏற்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அண்ணாமலை இயக்கத்தில் இணையும் பாஜகவினர்
இதைத் தொடர்ந்து, இன்று வெள்ளிக்கிழமை காலை தனது புதிய அமைப்பை தொடங்குவதாக அண்ணாமலை அறிவித்தார். இதை தொடர்ந்து, அவரது இயக்கத்தில் பல்வேறு நபர்கள் அதிரடியாக இணைந்து வருகின்றனர். அந்த வகையில், பாஜகவை சேர்ந்த மாநில துணைத்தலைவர் உள்பட பலர் அந்த கட்சியில் இருந்து விலகி அண்ணாமலை இயக்கத்தில் தாமாக முன்வந்து இணைந்து வருகின்றனர். இதே போல, பலரும் அண்ணாமலை இயக்கத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: அங்கன்வாடி மையத்தில் குழந்தையை சாக்கு பையால் மூடி மிரட்டல்.. ஊழியர் மீது அடுத்தடுத்து பாய்ந்த அதிரடி நடவடிக்கை!