சிவகாசி அருகே பட்டாசு குடோன் விபத்து… பலி எண்ணிக்கை 3- ஆக உயர்வு.. பெரும் சோகம்!
Sivakasi Firecracker Accident : சிவகாசி அருகே பட்டாசு குடோனில் நிகழ்ந்த வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3- ஆக அதிகரித்துள்ளது. மேலும், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர் .
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டி மற்றும் நாராயணபுரம் பகுதிகளில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. இங்கு, சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் வழக்கம் போல இன்று ஞாயிற்றுக்கிழமை பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென பட்டாசு குடோனில் வைக்கப்பட்டிருந்த வெடிகள் வெடித்து சிதறியது. பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறியதுடன், விண்ணை முட்டும் அளவுக்கு அடர்ந்த கரும்புகை சூழ்ந்தது. இந்த விபத்து காரணமாக சுற்று வட்டாரத்தை சேர்ந்த 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு வெடி சட்டம் உணரப்பட்டதாக அந்த பகுதி மக்கள் கூறினர். விபத்து குறித்த தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பலி எண்ணிக்கை 3- ஆக உயர்வு
மேலும், குடோனில் சிக்கி இருந்த தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இதில், இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் சுமார் 90 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்டார். இவர், உடனடியாக அவசர ஆம்புலன்ஸ் மூலமாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஏற்கனவே உயிரிழந்த இருவரின் சடலங்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் படிக்க: சென்னையில் பெரும் அதிர்ச்சி.. 5-ஆவது மாடியில் இருந்து விழுந்த தள்ளுவண்டி.. நொடியில் பறிபோன உயிர்!




கட்டிய இடுபாடுகளுள் சிக்கியவர்கள் மீட்கும் பணி
இதன் காரணமாக, பட்டாசு குடோன் வெடி விபத்து உயிரிழப்பு எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. மேலும், கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய மற்றொரு தொழிலாளியை தேடும் முயற்சியில் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார், உள்ளூர் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த விபத்தில் சிக்கி காயம் அடைந்த தொழிலாளர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
விருதுநகரில் தொடர் பட்டாசு ஆலை விபத்து
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், வெப்பத்தின் காரணமாகவோ அல்லது வெளி பொருள்களில் ஏற்பட்ட உராய்வு காரணமாகவோ இந்த வெளி விபத்து சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் வெடி விபத்து உயிரிழப்பு சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: ரூ. 50 லஞ்சம்.. தூக்கியடித்த எஸ்பி.. மயிலாடுதுறையில் லஞ்ச புகாரில் சிக்கிய காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்!