பழனி முருகன் கோயில் நில மோசடி.. மதுரை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி விசாரணை நிலை அறிக்கை தாக்கல்!
Palani Land Irregularities CBCID Investigation: பழனி தண்டாயுதபாணி முருகன் கோயிலுக்கு சொந்தமான நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீசாரின் விசாரணை நிலை அறிக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முழு விவரத்தை இந்தப்பதிவில் பார்க்கலாம்.
திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பழனி தண்டாயுதபாணி முருகன் கோவில் மடத்துக்கு சொந்தமான ரூ. 100 கோடி மதிப்பிலான நிலம் கடந்த ஜூலை 6- ஆம் தேதி நீதிமன்ற உத்தரவை மீறி போலி ஆவணங்கள் மூலமாக தனி நபர்களுக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது குறித்த புகாரின் பேரில், சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில், நிலத்தை விற்பனை செய்த முருகதாஸ் மற்றும் நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை, சேதுபதி, அன்வர்தீன் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இவர்களை ஆகஸ்ட் 12- ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற உத்தரவிடுமாறு அதிமுக முன்னாள் எம்எல்ஏ வேணுகோபால் மற்றும் பழனி நகராட்சி மன்ற தலைவர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட மூவர் மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
மதுரை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி விசாரணை அறிக்கை தாக்கல்
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சிபிசிஐடி விசாரணையின் நிலை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, இந்த மனு மீதான விசாரணை ஆனது இன்று புதன்கிழமை ( ஆகஸ்ட் 5- ஆம் தேதி) விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிசிஐடி தரப்பில் மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கைகள், வழக்கின் நிலை மற்றும் வழக்கின் போக்கு உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய விரிவான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, மனுதாரர் தரப்பில் விசாரணை நிலை அறிக்கையின் நகலை தங்களுக்கும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும் படிக்க: வேகமாக பைக் ஓட்டியதால் மோதல்.. கோவையில் இளைஞர் கொடூர கொலை.. 8 பேர் அதிரடி கைது!




நில முறகேடு வழக்கில் தொடர் விசாரணை
இதனை கேட்ட நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் விரிவான விசாரணையை அடுத்த வாரம் மேற்கொள்வதாக கூறி ஒத்தி வைத்தனர். இந்த வழக்கில் பழனி நிரந்தர சார் பதிவாளர் பாலசந்தர் மற்றும் பத்திரப்பதிவு செய்த மற்றொரு சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்ட பதிவாளர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில், ஜஸ்டின் மணிகண்டனிடம் சிபிசிஐடி போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயர்மட்ட குழு அமைத்து விசாரணை
மேலும், இவர் பணிபுரிந்த அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் பத்திரப்பதிவு செய்த ஆவணங்களை ஆய்வு செய்வதற்காக பத்திரப்பதிவுத்துறை தரப்பில் இருந்து 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த வழக்கு தொடர்பாக உயர்மட்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ரூ.1.3 கோடி லஞ்ச பணம் பறிமுதல்.. தமிழகம் முழுவதும் 24 அரசு ஊழியர்கள் கைது.. டிவிஏசி அதிரடி நடவடிக்கை!