ரூ.1.3 கோடி லஞ்ச பணம் பறிமுதல்.. தமிழகம் முழுவதும் 24 அரசு ஊழியர்கள் கைது.. டிவிஏசி அதிரடி நடவடிக்கை!
24 Govt Employees Arrested In Tamil Nadu : தமிழகம் முழுவதும் வெவ்வேறு அலுவலகங்களில் ரூ.1. 3 கோடி லஞ்சம் பெற்றதாக 24 அரசு ஊழியர்களை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர் .
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெறுவதை தடுக்கும் விதமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, கடந்த ஜூலை 1- ஆம் தேதி முதல் 31- ஆம் தேதி வரை பல்வேறு அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டிருந்தனர். இந்த சோதனைகளில், அலுவல் ரீதியான பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.500 முதல் ரூ.1 லட்சம் வரை லஞ்சம் பெற்றதாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர், வட்டாட்சியர், இளநிலை உதவியாளர், மின்வாரிய வணிக ஆய்வாளர், உதவி மின் பொறியாளர், கிராம நிர்வாக அலுவலர், சமூக நல விரிவாக்க அலுவலர், காவல் உதவி ஆய்வாளர் மற்றும் இரண்டாம் நிலை காவலர் உள்பட 24 அரசு ஊழியர்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
13 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை
இதில், திருவள்ளூர், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தேனி, ராணிப்பேட்டை, திண்டுக்கல், சென்னை, தஞ்சாவூர் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் 13 அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனைகளில் கணக்கில் வராத ரொக்கம் ரூ. 13 லட்சத்து 39 ஆயிரத்து 80 பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. மேலும், மாநில எல்லைகளில் அமைந்துள்ள 6 வாகன சோதனை சாவடிகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனைகளில் கணக்கில் வராத ரொக்கமாக ரூ.9 லட்சத்து 87 ஆயிரத்து 890 கைப்பற்றப்பட்டது.
மேலும் படிக்க: தமிழக பட்ஜெட்.. “Blast Blast” இல்ல “Waste Waste”… மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!




அரசு அலுவலகங்களில் சல்லடை போட்டு ஆராயும் போலீசார்
இது தொடர்பாக, அந்தந்த மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் 17- ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் மற்றும் அலுவலர்கள், மாவட்ட ஆய்வு குழு அலுவலர்களுடன் இணைந்து தமிழகம் முழுவதும் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் திடீர் சோதனை மேற்கொண்டிருந்தனர். இந்த சோதனையின் முடிவில் கணக்கில் வராத ரூ.13 லட்சத்து 88 ஆயிரத்து 750 பறிமுதல் செய்யப்பட்டது.
மொத்தம் ரூ.1. 31 கோடி லஞ்ச பணம் பறிமுதல்
இது மட்டும் இன்றி சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் கூகுள் பே மூலமாக ரூ.94 லட்சத்து 69 ஆயிரத்து 887 என மொத்தம் ரூ. ஒரு கோடியே 31 லட்சத்து 85 ஆயிரத்து 607 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: வேகமாக பைக் ஓட்டியதால் மோதல்.. கோவையில் இளைஞர் கொடூர கொலை.. 8 பேர் அதிரடி கைது!