பழனி கோயில் நில முறைகேடு வழக்கு.. ஆய்வு செய்வதற்காக 6 பேர் கொண்ட குழு அமைப்பு!
Palani Land Irregularities Committee Formed: பழனி தண்டாயுதபாணி கோயில் நில முறைகேடு விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சார்- பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பதிவு செய்த ஆவணங்களை ஆய்வு செய்வதற்காக 6 பேர் கொண்ட குழுவை பத்திரப்பதிவு துறை அமைத்து உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி முருகன் கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் கடந்த ஜூலை 6- ஆம் தேதி தனி நபர்களுக்கு ரூ.2 கோடிக்கு முறைகேடாக பத்திர பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக, கோவில் நிலங்கள் கண்காணிப்பாளர் முருகானந்தம் சிபிசிஐடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், பழனி சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளை நிர்வாகி உள்பட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பதிவு செய்த அனைத்து நிலங்களின் ஆவணங்களையும் ஆய்வு செய்வதற்காக 6 பேர் கொண்ட சிறப்பு குழுவை பத்திரப்பதிவுத்துறை அமைத்துள்ளது. இந்த குழுவானது சார் பதிவாளராக ஜஸ்டின் மணிகண்டன் பொறுப்பேற்ற நாள் முதல் தற்போது வரை பதிவு செய்த அனைத்து ஆவணங்களையும் சிறப்பு தணிக்கை செய்து 3 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட சார் – பதிவாளர்
பழனி முருகன் கோவில் நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஜஸ்டின் மணிகண்டனிடம் சிபிசிஐடி போலீசார் சுமார் 5 நாட்களுக்கு மேலாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், பல்வேறு தகவல்களை சிபிசிஐடி போலீஸ் சார்பாக பெற்றதாக கூறப்படுகிறது. அத்துடன், அவரது வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
மேலும் படிக்க: 2026-27 வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் என்ன?.




நிலத்தை விற்றவரின் வீட்டுக்கு போலீசார் சீல் வைப்பு
இதே போல, கோவில் நிலத்தை விற்பனை செய்த விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியரும், பழனி கோயில் அறக்கட்டளை உறுப்பினருமான முருகதாஸ் என்பவரின் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்ட நிலையில், அங்கிருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட ஆவணங்களை கைப்பற்றினர். அத்துடன், அவரது வீட்டுக்கு போலீசார் சீல் வைத்தனர். இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, பழனி கோயில் நிலம் முறைகேடு செய்யப்பட்டது தொடர்பாக 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்தது.
நில முறைகேடு தொடர்பாக 3 பேர் குழு
இந்த குழுவானது, பத்திரப்பதிவு நாளில் பழனி சார் பதிவாளர் அலுவலகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளில் பதிவான பத்திரப்பதிவு விவகாரம் உள்ளிட்டவை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. அந்த வகையில், தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்ட சார் பதிவாளர் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: மஞ்சள், சிவப்பு! தவெக கொடி நிறத்துக்கு மாறிய அரசுப் போக்குவரத்துக் கழக செயலி!