2026-27 வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் என்ன?..
TN Agriculture Budget 2026: தமிழகப் பொருளாதாரத்தில் 13% பங்களிப்பைக் கொண்டுள்ள வேளாண் துறை, சாகுபடி பரப்பு சரிவு, பருவநிலை மாற்றம் மற்றும் இடைத்தரகர்கள் போன்ற பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. வரவிருக்கும் 2026-27 வேளாண் பட்ஜெட்டில் இதற்குத் தீர்வு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னை, ஜூலை 31: ஒரு மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பு மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தின் முதன்மைத் தூணாக விளங்குவது வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த தொழிலும் ஆகும். தமிழகப் பொருளாதாரத்தில் சுமார் 13% பங்களிப்பைக் கொண்டுள்ள இத்துறை, பல்வேறு நெருக்கடிகளையும் சவால்களையும் சந்தித்து வரும் சூழலில், வரவிருக்கும் 2026-2027 நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: முந்தைய திமுக அரசின் ‘தாயுமானவர்’ திட்டம் பெயரை மாற்றிய தவெக அரசு!!
விவசாயத்தின் முதன்மைச் சவால்கள்:
கடந்த 2001-2002 ஆம் ஆண்டிற்குப் பிறகு, மாநிலத்தில் சுமார் 2 லட்சம் ஹெக்டர் சாகுபடி பரப்பு குறைந்து, தரிசு நிலங்களின் அளவு அதிகரித்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இத்துறை வீழ்ச்சியடைவதற்கான முதன்மைக் காரணங்கள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் கடுமையான விலை உயர்வு. தொழிலாளர்கள் பற்றாக்குறையால் கூலிச் செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது.
நிலத்தடி நீர்மட்டம் சரிவு, பருவமழை பொய்த்துப்போதல் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை பேரிடர்கள். நவீன அறுவடை இயந்திரங்கள் மற்றும் விளைபொருட்களைப் பாதுகாக்கும் குளிர்பதனச் சேமிப்புக் கிடங்குகள் போதுமான அளவில் இல்லாத நிலை.
இடைத்தரகர்கள் ஆதிக்கம் & விழிப்புணர்வின்மை:
அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) குறித்துப் பெரும்பாலான விவசாயிகளுக்குச் சரியான விழிப்புணர்வு இல்லாதது கவலையளிக்கும் விஷயமாக உள்ளது. தமிழகத்தில் 68% நெல் விவசாயிகளுக்கு அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்துப் போதிய விழிப்புணர்வு இல்லை. 80% விவசாயிகள் அரசு கொள்முதல் நிலையங்களை விட உள்ளூர் சந்தைகளையே நம்பியுள்ளனர்.
இடைத்தரகர்கள் சுரண்டல்:
இதன் விளைவாகச் சந்தை விலை மாற்றங்களாலும், இடைத்தரகர்களின் ஆதிக்கத்தாலும் உழைப்பிற்கு ஏற்ற நியாயமான லாபம் கிடைக்காமல் விவசாயிகள் தொடர் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர்.
மீட்டெடுக்கும் கால்நடை வளர்ப்புத் துறை
பயிர்ச் சாகுபடித் துறையில் சரிவு ஏற்பட்ட போதிலும், அதைச் சார்ந்த கால்நடை வளர்ப்புத் துறை விவசாயிகளுக்கு ஒரு மாற்று வாழ்வாதாரமாக உருவெடுத்துள்ளது. கடந்த 2011-2012 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில், வேளாண் துறையின் மொத்த வருமானத்தில் கால்நடை வளர்ப்பு மூலம் கிடைக்கும் வருமானப் பங்களிப்பு 30%-லிருந்து 53%-ஆக உயர்ந்து, இத்துறையை ஓரளவு மீட்டெடுத்து வருகிறது.
பட்ஜெட்டில் விவசாயிகளின் எதிர்பார்ப்புகள்:
வரவிருக்கும் தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் சாகுபடியை மீண்டும் ஊக்குவிக்கும் வகையில் அரசு சிறப்பான திட்டங்களை அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிக்க: “முதலில் மின்வெட்டு.. இப்போது மின்கட்டண உயர்வு!”.. தவெக ஆட்சியில் குளறுபடிகள்.. மு.க.ஸ்டாலின் சாடல்!!
கூடுதல் கொள்முதல் விலை:
நெல் மற்றும் கரும்புக்கு அரசு வழங்கும் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும். அறுவடைக்குப் பின் விளைபொருட்கள் வீணாவதைத் தடுக்க அனைத்து முக்கிய வேளாண் மையங்களிலும் நவீன குளிர்பதன சேமிப்புக் கிடங்குகளை அமைக்க வேண்டும். சிறு, குறு விவசாயிகளுக்கு மானிய விலையில் நவீன அறுவடை இயந்திரங்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.