முந்தைய திமுக அரசின் ‘தாயுமானவர்’ திட்டம் பெயரை மாற்றிய தவெக அரசு!!
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் (2025 ஆகஸ்ட் 12 அன்று) கொண்டுவரப்பட்ட மிக முக்கியமான சமூக நலத் திட்டங்களில் ஒன்று ‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்’ ஆகும். ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வாகனங்கள் மூலமாக ரேஷன் அரிசி, சர்க்கரை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் நேரடியாகப் பயனாளிகளின் வீடுகளுக்கேச் சென்று வழங்கப்பட்டு வந்தன.
சென்னை, ஜூலை 31: கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டுச் செயல்படுத்தப்பட்டு வந்த பல்வேறு அரசு நலத்திட்டங்களின் பெயர்களைத் தவெக அரசு தொடர்ந்து மாற்றி அமைத்து வரும் நிலையில், தற்போது ‘முதலமைச்சரின் தாயுமானவர்’ திட்டத்தின் பெயரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டப் பெயர்களைத் தவெக அரசு திட்டமிட்டு மாற்றி வருவதாக அக்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை.. சென்னையில் மாலை நேரத்தில் மழைக்கு வாய்ப்பு.. பிற மாவட்டங்களில் எப்படி?
‘தாயுமானவர்’ திட்டத்தின் பின்னணி:
கடந்த திமுக ஆட்சியில், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கடைகளுக்கு நேரில் வரத் தேவையின்றி, அவர்களின் இல்லங்களுக்கேச் சென்று நேரடியாக ரேஷன் பொருட்களை வழங்கும் நோக்கில் ‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்’ கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் சுமார் 16.73 லட்சம் குடும்ப அட்டைகளைச் சேர்ந்த 21.7 லட்சத்திற்கும் அதிகமான முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெற்று வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நாட்களில் சிறப்பு வாகனங்கள் மூலமாகப் பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வந்தன.
ஆட்சியர் செய்திக்குறிப்பில் அம்பலம்:
தற்போது அமைந்துள்ள தவெக அரசு, இத்திட்டத்தின் பெயரில் இருந்த ‘தாயுமானவர்’ என்ற அடைமொழியை நீக்கியுள்ளது. நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இத்திட்டம் இனி “முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம்” என்ற பொதுவான பெயரிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தாயுமானவர் திட்டம் என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க: “முதலில் மின்வெட்டு.. இப்போது மின்கட்டண உயர்வு!”.. தவெக ஆட்சியில் குளறுபடிகள்.. மு.க.ஸ்டாலின் சாடல்!!
மாற்றப்படும் திமுக அரசின் திட்டப் பெயர்கள்:
தவெக அரசு பொறுப்பேற்றது முதல், முந்தைய திமுக அரசால் தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்களின் பெயர்கள் வரிசையாக மாற்றப்பட்டு வருகின்றன. அந்தவரிசையில், மகளிர் விடியல் பயணம் திட்டம் – ‘மகளிர் பயணம் திட்டம்’ எனப் பெயர் மாற்றம் பெற்றது. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் – ‘காமராஜர் காலை உணவுத் திட்டம்’ என மாற்றப்பட்டது. நான் முதல்வன் திட்டம் – ‘தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அந்த வரிசையில் தற்போது, முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ‘தாயுமானவர்’ திட்டத்தின் பெயரும் தவெக அரசால் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.