காவிரி விவகாரம்.. முதல்வர் ஜோசப் விஜய் கர்நாடகம் வர வேண்டாம்… டி. கே. சிவகுமார் திடீர் அறிவிப்பு!
DK Shivakumar Joseph Vijay Meeting Cancel: காவிரி நீர் மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கர்நாடகா செல்ல இருந்த நிலையில் வர வேண்டாம் என்று அந்த மாநில முதல்வர் டி. கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே காவிரி நீர் மற்றும் மேகதாது அணை தொடர்பாக நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு, கர்நாடக முதல்வர் டி. கே. சிவகுமார் அழைப்பு விடுத்ததன் பேரில், வருகிற ஆகஸ்ட் 3- ஆம் தேதி ( திங்கள்கிழமை) முதல்வர் ஜோசப் விஜய் கர்நாடகா செல்ல திட்டமிட்டு இருந்தார். அங்கு, காவிரி நீர் விவகாரம் மற்றும் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது. இதனிடையே, தமிழக முதல்வர் விஜய் வருகைக்கு எதிராக கர்நாடக மாநிலத்தில் பல்வேறு அமைப்பினர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர் இந்த நிலையில், தமிழக முதல்வர் விஜய் கர்நாடகம் வர வேண்டாம் என்று அந்த மாநில முதல்வர் டி. கே. சிவகுமார் திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேகதாது அணை தமிழகத்துக்கே அதிக பயன் தரும்
இது தொடர்பாக கர்நாடக மாநில முதல்வர் டி. கே. சிவகுமார் அரசு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார். இதில், பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்ட நிலையில், இதைத் தொடர்ந்து டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடக மாநிலத்தில் மேகதாது பகுதியில் அணை கட்டுவது கர்நாடகத்தை விட தமிழகத்துக்கு அதிக பயன் தரும். கர்நாடக மாநிலத்தில் வீணாகும் தண்ணீரை மேகதாது அணை கட்டுவதன் மூலமாக சேமிக்க முடியும். மேகதாது அணை கட்டப்படுவதால் கர்நாடகாவில் மின்சார உற்பத்தி மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். கர்நாடக மாநிலத்தின் நல் எண்ணங்களை பாதுகாக்க அனைத்து வகையிலும் உறுதியோடு செயல்பட்டு வருகிறோம்.
மேலும் படிக்க: கர்நாடகா பயணம் சாத்தியமா? காவிரி நீர் விவகாரம் குறித்து முதல்வர் விஜய் அவசர ஆலோசனை!!




கர்நாடகாவில் அசாதாரண சூழல்
இதே போல, தமிழகத்தின் நலன்கள் குறித்தும் அம் மாநில அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. காவிரி நீர் விவகாரம் மற்றும் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடகா அரசுகள் பேச்சுவார்த்தை நடத்த இருந்தது. தற்போது, கர்நாடகாவில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வருகைக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால், கர்நாடகாவில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. எனவே, இந்த சூழ்நிலையின் போது, ( கர்நாடக மாநில விருந்தாளி) தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கர்நாடகம் வருகை தந்தால் நன்றாக இருக்காது.
ரத்தாகிறதா தமிழக முதல்வர் விஜய் பயணம்
இதன் காரணமாக மற்றொரு தேதியில் சந்திப்பு கூட்டத்தை நடத்தலாம் என தமிழக முதல்வர் விஜய்க்கு கோரிக்கை வைக்கிறேன். சிறிது காலம் காத்திருந்து உரிய நேரம் வரும் போது இருவரும் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொள்வோம். இக்கட்டான இந்த சூழலில் அவசரப்பட்டு முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம் என்று தெரிவித்தார். இதனால், தமிழக முதல்வர் விஜய் கர்நாடக பயணம் ரத்து செய்யப்படும் என்று தெரிகிறது.
மேலும் படிக்க: “காவிரி விவகாரத்தில் வாய் மூடி மௌனமாக இருக்கும் முதல்வர் விஜய்!”.. இபிஎஸ் கடும் கண்டனம்!!