தவெக அரசின் உண்மை முகத்தை மக்கள் உணர தொடங்கிவிட்டனர்… எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி!
Opposition leader Udhayanidhi Stalin : தமிழக வெற்றிக் கழக அரசின் உண்மை முகத்தை பொது மக்கள் உணர தொடங்கி விட்டதாகவும், வரும் காலங்களில் மேலும் பல்வேறு உண்மைகள் வெளி வரும் என்றும் எதிர்க் கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் பூண்டி கலைச்செல்வன் இல்ல திருமண விழா இன்று திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் துணை முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நமது தலைவர் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இது. ஒரு சாதாரண திருமண நிகழ்ச்சியாக மட்டுமின்றி நம்முடைய கட்சி நிகழ்ச்சியாக தற்போது மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எந்த கட்சிகள் யார் பக்கம் சென்றாலும், எந்த மாவட்டம் எந்த முடிவு எடுத்தாலும், டெல்டா மாவட்டம் எப்போதும் திமுக பக்கம் தான் என்பதை நிரூபித்து காட்டிய அத்தனை பேருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். திருவாரூர் மாவட்டத்தில் திமுக வளர்வதற்கு உறுதியான அடித்தளம் இட்டவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அவரை நீங்கள் எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டீர்கள் என்பது தெரியும்.
திமுகவின் கோட்டையாக விளங்கும் டெல்டா மாவட்டம்
திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி ஒட்டுமொத்த டெல்டா மாவட்டமுமே திமுகவின் கோட்டையாக தான் விளங்கி வருகிறது. தமிழகம் முழுக்க இது மாதிரியான லட்சக்கணக்கான திமுக குடும்பங்கள் இருப்பதால்தான் கட்சி எவ்வளவு பெரிய புயலை சந்தித்தாலும் நாம் திரும்பத் திரும்ப மீண்டும் மீண்டும் எழுந்து வந்து கொண்டு இருக்கிறோம். இந்த திருமண விழாவில் இருக்கக்கூடிய எழுச்சியையும், உங்களுடைய மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் பார்க்கும்போது நிச்சயம் நம்முடைய தலைவர் மற்றும் திமுக மீண்டும் வெற்றிவாகை சூடும் என்பதில் எனக்கு எந்த விதமான சந்தேகமும் இல்லை.
மேலும் படிக்க: தமிழகத்தில் மே 28ல் பக்ரீத் பெருநாள் – தலைமை காஜி அறிவிப்பு




அனைத்து மக்களுக்கும் சேர்த்து உழைக்கும் கட்சியாக திமுக
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியபடி, திமுக வெறும் அரசியல் இயக்கம் இல்லை. வெறும் கட்சியும் கிடையாது. அது ஒரு சமுதாய இயக்கம். நாம் தேர்தல் அரசியலில் தோல்வி அடைந்தாலும், கொள்கை அரசியலில் எந்த காலமும் தோற்றது கிடையாது. தோற்கவும் மாட்டோம். வெற்றி. தோல்வி அனைத்தும் சகஜம். சமுதாய இயக்கமான திமுக எப்போதும் மக்களுக்கான பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளும். திமுகவுக்கு வாக்களித்த மக்களுக்கு மட்டும் இன்றி, வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்தே நாம் எதிர்க்கட்சியாக உழைப்போம்.
தமிழக வெற்றிக் கழக அரசின் உண்மை முகத்தை உணர தொடங்கியுள்ளனர்
தமிழகத்துக்கு வருகிற ஆபத்துகளை எல்லாம் நிச்சயம் திமுக தடுத்து நிறுத்தும். மாநில உரிமைகள் காக்கப்படும். கடந்த 10 நாட்களிலேயே புதிய ஆட்சியின் உண்மையான முகத்தை உணர்ந்து இருப்பார்கள். போக போக பல்வேறு உண்மைகள் தெரிய வரும். சூரியன் ஒருபோதும் மறையாது. அது மறுபடியும் உதிக்கும். அதன் ஒளியில் தமிழ்நாடு மீண்டும் செழிக்கும் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: அதிமுகவில் இருந்து செம்மலை விலகல்.. ஈகோவால் கட்சி பலவீனமாகிவிட்டதாக வருத்தம்!!