தேர்தல் பணிகளை செய்யாமலேயே தவெக ஆட்சிக்கு வந்துள்ளது.. மு.க.ஸ்டாலின் அதிரடி குற்றச்சாட்டு!
DMK leader MK Stalin Latest Speech: பல்வேறு தேர்தல் பணிகளை செய்தும் திமுகவால் வெற்றி பெறமுடியவில்லை. ஆனால், எந்த விதமான தேர்தல் பணிகளையும் மேற்கொள்ளாமல் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.
தஞ்சாவூரில் பூண்டி கலைச்செல்வன் இல்ல திருமண விழாவில் முன்னாள் முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு. க. ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது: தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் படுதோல்வி அடைந்த மாதிரியும், திமுகவின் கதை இதோடு முடிந்தது என்பது போலவும் பலர் இரங்கல் பாடி வருகின்றனர். நம்முடைய இன எதிரிகள் இந்த சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், திமுகவை பொருத்தவரை எத்தனையோ தேர்தல்களை சந்தித்துள்ளது. கடந்த 1949- இல் தொடங்கப்பட்ட இந்த கழகம் தொடர்ந்து 1952, 1957, 1962, 1971- ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் பல்வேறு வெற்றிகள் மற்றும் தோல்விகளை கண்டுள்ளது. தோல்வி அடைந்த இடத்தில் தான் திமுக எப்போதும் வேகம் கொண்ட பறவையாக துணிந்து எழும். சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வி அடைந்ததால் அனைவரும் சோகத்தில் இருப்பதாக பலர் கூறுகின்றனர்.
தமிழகத்தில் திமுகவே ஆட்சியில் உள்ளது
ஆனால், திமுகவை சேர்ந்தவர்கள் யாருக்கும் சோகம் இல்லை. தமிழகத்தில் தற்போதும் திமுக தான் ஆட்சியில் உள்ளது. கடந்த 5 ஆண்டு கால திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் பொதுமக்கள், விவசாயிகள், ஏழை எளிய மக்கள், தொழிலாளர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், பெண்கள் உள்ளிட்டோருக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி உள்ளோம். திராவிட முன்னேற்ற கழகம் தோல்வியே சந்தித்து, புதிய அரசு பொறுப்பேற்றுள்ள போது நான் அந்த அரசுக்கு வாழ்த்து கூறினேன். அப்போது, திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்கள் அனைத்தும் தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் தொடர வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.
மேலும் படிக்க: “நான் முதலமைச்சர், இபிஎஸ் துணை முதல்வர்”.. கடைசி நிமிடத்தில் வந்த போன்கால்.. ரகசியம் உடைத்த திருமாவளவன்!!




தவெக ஆட்சியிலும் தொடரும் திமுக அரசின் திட்டங்கள்
அதன் அடிப்படையில், புதிய ஆட்சியிலும் திமுகவின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே தான், தற்போதும் தமிழகத்தில் திமுக ஆட்சி தான் நடைபெற்று வருகிறது. இந்த திட்டங்கள் தொடர்கிற வரை தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தொடரும். எனவே, சட்டமன்ற தேர்தல் முடிவுகளை பார்த்து நான் சோர்வடையவில்லை. இந்த தேர்தலில் திமுக பெற்ற வெற்றிகள், தோல்விகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்வதற்காக குழுவை நியமித்துள்ளேன்.
தேர்தல் வேலைகளை செய்யாமல் ஆட்சிக்கு வந்த தவெக
இந்த குழுவானது 234 தொகுதிகளிலும் கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது. உடன்பிறப்பே வா என்ற வெப்சைட்டிலும் தங்களது கருத்துக்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம். கடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிந்த உடனேயே திமுக சட்டமன்ற தேர்தலுக்கான பல்வேறு பணிகளை தொடங்கியது. அப்படி இருந்தும் வெற்றி பெற முடியவில்லை. ஆனால், எந்த தேர்தல் பணிகளையும் முன்னெடுக்காமல் தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வந்துள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: அதிமுக பொதுக்குழுவைக் கூட்ட 5-ல் 3 பங்கு உறுப்பினர்கள் ஆதரவு.. இபிஎஸ்-க்கு புதிய நெருக்கடி!!