இடைத்தேர்தலுக்கான லாபம்.. திரை கவர்ச்சியில் பலியானவர்களின் குடும்பத்துக்கு அரசு வேலையா? கொதித்தெழுந்த சீமான்!
NTK Chief Coordinator Seeman : கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் திரைக் கவர்ச்சியால் பலியானவர்களின் குடும்பத்தினர் 41 பேருக்கு அரசு வேலை வழங்குவது எந்த விதத்தில் நியாயம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்தார்.
கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்குதற்கு சீமான் கடும் கண்டனண் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்று 50 நாட்கள் ஆகும் நிலையில் கரூரில் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை பார்க்காத முதல்வர் விஜய், அந்த தொகுதியின் அதிமுக எம்எல்ஏ எம். ஆர். விஜயபாஸ்கர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்ததை தொடர்ந்து, கரூருக்கு செல்ல முற்படுவதும், அங்கு உயிரிழந்த குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க திட்டமிடுவதும் மலிவான வாக்கரசியலாகும். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.35 லட்சம் வரை வழங்கப்பட்ட நிலையில், தற்போது அரசு வேலை என அறிவிப்பது இடைத்தேர்தலுக்காக செய்யப்படும் அற்பத்தனமாகும். தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என 41 பேர் உயிரிழந்ததை ஏற்க முடியாத பேரவலமாகும். சமகாலத்தில் நடைபெற்ற மிகப்பெரிய துயரமாகும்.
கரூர் இடைத்தேர்தலுக்காக அரசு வேலை
வார்த்தைகளால் விவரிக்க முடியாத வலி. அதில் உறவுகளை இழந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவித்தொகை வழங்க வேண்டியது தார்மீக கடமையாகும். அந்த தொகை முழுமையாக வழங்கப்பட்ட பின்னரும் கரூர் இடைத்தேர்தலுக்காக அரசு வேலை என அறிவிப்பது மிக தவறான முன்னுதாரணம் ஆகும். இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அரசு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு வேலைக்காக பல லட்சக்கணக்கான தமிழக இளைஞர்கள் காத்திருக்கும் நிலையில் அவர்களுக்கான வாய்ப்புகளை தராமல் இடைத்தேர்தல் அரசியல் லாபத்துக்காக அரசு வேலையை தாரை பார்ப்பது கடும் கண்டனத்துக்குரியதாகும்.
மேலும் படிக்க: புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ்-பாஜகவின் குறைப்பிரசவ ஆட்சி அமைந்துள்ளது.. நாராயணசாமி கடும் அட்டாக்!




திரைக்கவர்ச்சியில் பலியானவரின் குடும்பத்தினருக்கு அரசுப்பணியா
நாட்டின் பாதுகாப்புக்காக உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கோ, சுகாதாரத்தை பேணிக்காக தூய்மை பணி செய்து நச்சு வாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கோ வழங்கப்படாத அரசு பணி திரை கவர்ச்சிக்கு பலியானவர்களின் குடும்பத்துக்கு கிடைக்கும் என்றால் இது எந்த விதத்தில் சரியானதாகும். கரூரில் உயிரிழந்த 41 பேரின் மரணத்திற்கு தவெகவும், முதல்வர் விஜயும் தான் முதல் காரணம் என்பதை நாடறியும். ஆனால், தற்போது வரை அந்த மரணங்களுக்கு எந்த விதத்திலும் பொறுப்பேற்காமல் தன் மீது பழி போடுவதாக கூறிக்கொண்டு அரசியல் செய்து வருவது மிகவும் கீழ்த்தரமானதாகும்,
இடைத்தேர்தலுக்கான கேலிக்கூத்தாகும்
கரூர் உயிரிழப்பின் போது, களத்துக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை பார்க்காமல் விரைந்து வீட்டுக்கு சென்று ஓய்வெடுத்தவர், பாதிக்கப்பட்ட மக்களை அவர்களுடைய வீட்டுக்கு சென்று பார்க்காமல், ஒரு மாதம் கழித்து மாமல்லபுரத்தில் உள்ள விடுதிக்கு அழைத்து பார்த்தவர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் மீது தற்போது கொள்ளும் பரிவெல்லாம் இடைத்தேர்தலை மனதில் கொண்டே நடக்கும் கேலிக்கூத்து என்று கடுமையாக சீமான் விமர்சித்துள்ளார்.
மேலும் படிக்க: செந்தில் பாலாஜி கைதில் இருந்து தப்பினார்.. குதிரை பேர வழக்கில் முன் ஜாமீன்!