செந்தில் பாலாஜி கைதில் இருந்து தப்பினார்.. குதிரை பேர வழக்கில் முன் ஜாமீன்!
Senthil Balaji Anticipatory Bail : தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை தொகுதி எம்எல்ஏ இளையராஜாவிடம் குதிரை பேரம் பேசிய வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாருக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் ஊத்தங்கரை தொகுதி எம்எல்ஏ இளையராஜாவிடம் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரி ரூ.35 கோடி பேரம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்து தேர்தல் கணிப்பு நிறுவனம் நடத்தி வரும் திருநாவுக்கரசு, நரேஷ், தியாகராஜன் உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அசோக்குமார் ஆகியோருக்கு போலீசார் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி இருந்தனர். இதற்கு ஆஜராகாத இருவரும், சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று புதன்கிழமை ( ஜூலை 8) நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது.
செந்தில் பாலாஜி- அசோக்குமாருக்கு முன் ஜாமீன்
அப்போது, செந்தில் பாலாஜி தரப்பினர் மற்றும் அரசு தரப்பு வாதம், காவல்துறை தரப்பு வாதம் ஆகியவற்றை முன்வைக்கப்பட்டது. இதனை கேட்ட நீதிபதி இளந்திரையன் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவர்கள் சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அத்துடன், இவர்கள் இருவரும் தினந்தோறும் காலை மற்றும் மாலை என இரு வேளைகளில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரி முன் ஆஜராகி கையெழுத்து இடவேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க: டூரிஸ்ட் கைடு, ஆசிரியர்… நாட்டில் 300க்கும் மேற்பட்ட ஹோட்டல்களை ஏமாற்றிய தமிழர் – பரபரப்பு தகவல்




அரசுத் தரப்பு வாதம்
முன் ஜாமின் மீதான விவாதத்தின் போது அரசு தரப்பில், இவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அசோக்குமார் கைதானவர்களை சுமார் 40 முறை சந்தித்து பேசி உள்ளார். எனவே, குதிரை பேரம் விவகாரத்தில் இவர்களுக்கு தொடர்புள்ளது. இவர்களிடம் விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதன் அடிப்படையிலேயே உண்மையான விவரங்கள் வெளிவரும். இது தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனியாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் இவர்களுக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது என்று வாதம் முன்வைக்கப்பட்டது.
காவல் துறை தரப்பு வாதம்
கிண்டியில் உள்ள நட்சத்திர உணவகத்தில் குதிரை பேரம் தொடர்பாக கைதானவர்களை சந்தித்து பேசி உள்ளார். இதற்கான சிசிடிவி ஆதாரங்கள் உள்ளன. இதே போல, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள உணவகத்திலும் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது என்று வாதம் முன்வைக்கப்பட்டது. இதே போல, காவல்துறை தரப்பில் விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதால் கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டி உள்ளது. செந்தில் பாலாஜி, அசோக்குமார் ஆகியோருடன் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு உள்ளனர்.
செந்தில் பாலாஜி தரப்பு வாதம்
இவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து தான் இரு நட்சத்திர உணவகங்களில் சந்தித்துள்ளனர். இவர்கள் கூட்டு சதி செய்ததற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் திமுகவிடம் 59 எம்எல்ஏக்கள் பலமே உள்ளன. இதன் மூலம் எப்படி ஆட்சிய கவிழ்க்க முடியும். ரூ.35 கோடி பேரம் புகார் என்பது வெறும் யூகம் தான் என்று பல்வேறு வாதங்கள் முன் வைக்கப்பட்டது. இவ்வாறாக விவாதம் நடைபெற்றது.
மேலும் படிக்க: புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ்-பாஜகவின் குறைப்பிரசவ ஆட்சி அமைந்துள்ளது.. நாராயணசாமி கடும் அட்டாக்!