ஆபத்தில் முடிந்த அதிவேக பயணம்.. 3 பேருடன் சென்ற பைக் விபத்து.. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்த இளைஞர்!
Sivaganga Youth Died Bike Accident: சிவகங்கையில் பைக் விபத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்த இளைஞர் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பயணித்த இரு நண்பர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பியதுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், நாராயணசாமி தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் விஜய சுந்தர் ( 22 வயது). இவர், காரைக்குடியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பயிற்சி நிறுவனத்தில் அரசு போட்டி தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்தார். இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு தனது நண்பர்களுடன் தனது பைக்கில் கல்லூரி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென விஜய சுந்தரின் கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையின் தடுப்பு சுவரின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், விஜய சுந்தர் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவருடன் பைக்கில் சென்ற நண்பர்களான அபிஷேக் மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகியோர் லேசான காயமடைந்து கீழே விழுந்து கிடந்தனர். இந்த விபத்தை பார்த்த அங்கிருந்தவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தீவிர சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட இளைஞர்
தொடர்ந்து, இந்த விபத்து தொடர்பாக அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கிய 3 இளைஞர்களை மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, மருத்துவர்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். அப்போது, விஜய சுந்தர் உயிருக்கு ஆபத்தான முறையில் இருப்பதாக கூறி முதல் உதவி அளித்துவிட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க: இனி நோ பவர் கட்.. மீண்டும் மீண்டும் ஏற்படும் மின் தடைக்கு நிரந்தர தீர்வு.. மின்துறையில் RTEP திட்டம்!




சிகிச்சை பலனின்றி இளைஞர் பரிதாப மரணம்
அங்கு, விஜய சுந்தர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், தலையில் ஏற்பட்ட அதீத ரத்தப்போக்கு காரணமாக விஜய சுந்தர் பரிதாபமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து, அவரது சடலம் உடல் கூறாய்வு செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டது. மேலும், இவர்களது நண்பர்களான அபிஷேக் மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகியோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து சம்பவம் தொடர்பாக விஜய சுந்தரின் தந்தை கணேசன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகம்
அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி வந்த இளைஞர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: கல்லூரி மாணவிக்கு தொடர் லவ் டார்ச்சர்.. அலேக்காக தூக்கிய சிங்கப்பெண் படை.. தூத்துக்குடியில் சம்பவம்!