கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் பெயர் மாறுகிறது? முதல் கட்டமாக ரூ.1,500 வழங்க திட்டம்!
kalaignar Magalir Urimai Thogai Scheme Name Change : தமிழகத்தில் திமுக அரசு கொண்டு வந்த கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் பெயரை தவெக அரசு மதிப்புமிகு மகளிர் உரிமைத் தொகை என பெயர் மாற்றம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கலைஞர் மகளிர் உரிமை தொகை என்ற திட்டத்தின் கீழ் சுமார் 1.31 கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்பட்டு வந்தது. தற்போது, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தும் வகையில், திட்டத்தின் பெயரை மாற்றுவதற்கு தமிழக வெற்றிக் கழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் பெயரை “மதிப்பு மிகு மகளிர் உரிமைத் தொகை” என பெயர் மாற்றம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, இந்த திட்டத்தின் கீழ், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.2,500 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தமிழக வெற்றி கழகம் தெரிவித்திருந்தது. ஆனால், தமிழக நிதி நிலைமையின் அடிப்படையில் முதல் கட்டமாக ரூ.500 உயர்த்தப்பட்டு ரூ.1,500- ஆக வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
முதல் கட்டமாக மாதம்தோறும் ரூ.1,500 உரிமைத் தொகை
வரும் மாதங்களில் இந்த தொகை மேலும் உயர்த்தப்பட்டு தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு மாதம் தோறும் ரூ.2,500 உரிமைத் தொகை வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் ஒரு கோடியே 31 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 15 ஆயிரத்து 600 கோடி செலவாகிறது. தற்போது, இந்த உரிமை தொகை ரூ.1,500- ஆக உயர்த்தப்பட்டு வழங்கப்படும் பட்சத்தில் இதற்கான மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.23 ஆயிரத்து 400 கோடியாக அதிகரிக்கும்.
மேலும் படிக்க: முதல்வராக முதல் டெல்லி பயணம்.. பிரதமர் மோடியை சந்திக்கிறார் ஜோசப் விஜய்.. நேரம் ஒதுக்க கோரிக்கை!
தமிழக அரசுக்கு ரூ.23,400 கோடி கூடுதல் செலவு
இந்த பெரிய தொகை தமிழக அரசுக்கு கூடுதல் நிதி சுமையை ஏற்படுத்தும் என்பதால் இந்த உரிமை தொகையை படிப்படியாக உயர்த்துவதற்கு அரசு முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு தமிழக திட்ட குழு அளித்துள்ள பரிந்துரையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தற்போதைய பயனாளிகளில் சுமார் 15 சதவீதம் பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாவர். புதிய திட்டத்தின் படி 60 வயது வரம்பை அரசு பின்பற்றினால் தற்போது பயன்படும் மூத்த குடிமக்களில் சுமார் 19.5 லட்சம் பேர் இந்த திட்டத்தில் இருந்து விடுபட வாய்ப்பு உள்ளது.
மகளிர் உரிமைத்தொகை பயனாளிகள் குறைய வாய்ப்பு
இதன் காரணமாக மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை 1.31 கோடியில் இருந்து 1.1 கோடியாக குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற நிலையில், மே மாதத்துக்கான உரிமைத் தொகை ரூ.1.000 மகளிர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்தது. இந்த தொகையானது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் பெயரில் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: முதல்வர் விஜய்யின் கேரள பயணம் ரத்து? சதீசன் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை!