புதுச்சேரியில் அமைச்சர் பதவிக்கு ரூ.150 கோடி பேரம்.. முன்னாள் முதல்வர் நாராயணசாமி பரபரப்பு குற்றச்சாட்டு!
Puducherry EX CM Narayanasamy : புதுச்சேரி மாநிலத்தில் அமைச்சர் பதவிக்கு ரூ.100 கோடி முதல் ரூ.150 கோடி வரை பேரம் நடப்பதாகவும், அதன் காரணமாகவே அமைச்சரவை பதவி ஏற்பு விழா தள்ளி போவதாகவும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் என். ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதில், புதுச்சேரி மாநிலத்தின் முதலமைச்சராக என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி பொறுப்பேற்று ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அமைச்சரவையில் இடம் பெறுவதற்கு ரூ.100 கோடி வரை வழங்கப்பட்டு வருவதாக அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பரபரப்பை கிளப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் தொகுதி பங்கிட்டின்போது ஏற்பட்ட குளறுபடிகள் தான் இண்டி கூட்டணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. இந்த கருத்து வேறுபாடுகள் தேர்தலிலும் எதிரொலித்ததன் காரணமாக நாங்கள் தோல்வியை தழுவினோம். புதுச்சேரி மக்கள் இண்டி கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும் என்று உறுதியாக இருந்தனர்.
ஒற்றுமையின்மையால் இண்டி கூட்டணிக்கு தோல்வி
ஆனால், எங்கள் கையில் இருந்த வாய்ப்பை நாங்களே நழுவ விட்டு விட்டோம். ஒற்றுமை இல்லாத காரணத்தால் புதுச்சேரியில் இண்டி கூட்டணி தோல்வி அடைந்துள்ளது. தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்ததற்கு நாங்கள் ஆதரவு கொடுத்தது மட்டும் காரணம் இல்லை. அமைச்சரவை, உள்ளாட்சி தேர்தல், மாநிலங்களவை, மக்களவைத் தேர்தல் என அனைத்திலும் இடம் வகிக்கும் என்று காங்கிரஸ் தவெக ஆகிய கட்சிகள் பேசியுள்ளது. தமிழகத்தில் விஜய் முகத்துக்காக காங்கிரஸ் கட்சி கூட்டணியை முறிக்கவில்லை.
மேலும் படிக்க: தேர்தல் தோல்வி எதிரொலி.. திமுக அமைத்த கள ஆய்வு குழுவில் இடம் பெற்றவர்கள் யார்.. யார்.. முழு விவரம் உள்ளே!




பணம்- அதிகார பலத்தால் மீண்டும் பாஜக ஆட்சி
பல்வேறு ஆட்சிகளில் கூட்டணி மாறும் வாய்ப்புகள் வரும். திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கூறிவிட்டு சென்றிருந்தாள் நன்றாக இருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். புதுச்சேரியில் தொடர்ந்து 4 ஆண்டுகளாக என். ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி ஊழலில் ஈடுபட்ட நிலையில், பண பலம், அதிகார பலம் ஆகியவற்றால் மீண்டும் ஆட்சியில் அமர்ந்துள்ளது. புதிதாக அமைந்துள்ள அரசை 6 மாதத்துக்கு விமர்சனம் செய்ய மாட்டோம்.
அமைச்சர் பதவியை பெறுவதற்கு ரூ. 150 கோடி வரை பேரம்
புதுச்சேரியில் அமைச்சர் பதவியேற்பு விழா தாமதம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் பேரம் பேசுவது தான். அமைச்சர் பதவிக்கு ரூ.50 கோடி பேரம் பேசப்பட்டுள்ளது. அது படியவில்லை. இதனால், ரூ.100 கோடி முதல் ரூ.150 கோடி வரை பேரம் பேசப்பட்டு வருவதால் அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா தாமதம் ஏற்பட்டு வருகிறது. அமைச்சரவையில் இடம் பெறுவதற்கு பேரம் நடந்து வருவது தொடர்பாக முதல்வர் ரங்கசாமி மவுனமாக இல்லாமல் வாய் திறந்து பதில் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: முதல்வராக முதல் டெல்லி பயணம்.. பிரதமர் மோடியை சந்திக்கிறார் ஜோசப் விஜய்.. நேரம் ஒதுக்க கோரிக்கை!