வீட்டுக்குள் ஆயுதங்களுடன் புகுந்த 6 பேர் கும்பல்.. மரண ஓலத்தில் பிரிந்த இரு உயிர்.. காஞ்சிபுரத்தில் அரங்கேறிய கொடூரம்!
Kanchipuram Two Youth Murder : காஞ்சிபுரம் மாவட்டத்தில் வீட்டுக்குள் புகுந்து இரு இளைஞர்களை 6 பேர் கொண்ட கும்பல் கொடூரமான ஆயுதங்களால் வெட்டி கொலை செய்தது. அந்த கும்பலை கைது செய்தவதற்கான தேடுதல் வேட்டையில் தனிப்படை தீவிரமாக இறங்கி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் அருகே உள்ள அமரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ். இவரது வீட்டில் பரத் மற்றும் சீனு என்ற இரு இளைஞர்கள் தங்கி இருந்தனர், இவர்கள் மூன்று பேரும் நண்பர்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை ( மே 17- ஆம் தேதி) பிற்பகல் சுமார் 3 இரு சக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் லோகேஷ் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தது. அப்போது, வீட்டின் உள்ளே இருந்த பரத் மற்றும் சீனு ஆகிய இரு இளைஞர்களையும் அந்த கும்பல் வெட்ட முயன்றது. இதை பார்த்த இருவரும் வீட்டில் இருந்து தப்பி வெளியே ஓட முயன்றனர். ஆனால், அந்த கும்பல் அவர்களை தடுத்து நிறுத்தி வீட்டுக்குள் வைத்து பயங்கர ஆயுதங்களால் கொடூரமான முறையில் வெட்டி சாய்த்தது. இதில், பரத் மற்றும் சீனு ஆகியோர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர். பின்னர், அந்த கும்பல் தனது இரு சக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பி சென்றது.
6 பேர் கும்பல் வெட்டியதில் உயிரிழந்த இரு இளைஞர்கள்
இந்த கொடூர சம்பவத்தை அறிந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் திரண்டு வந்து வீட்டினுள் பலத்தை வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த பரத் மற்றும் சீனு ஆகியோரை மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, மருத்துவர்கள் பரிசோதித்ததில் இருவரும் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது. பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக மணிமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும், அந்தப் பகுதியில் விசாரணை நடத்தினர்.
மேலும் படிக்க: தவெக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு.. விஜய்க்கு எந்த துறை தெரியுமா?




கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை
இதை தொடர்ந்து, பரத் மற்றும் சீனு குடும்பத்தினரிடம் போலீசார் புகாரை பெற்று, அதன் அடிப்படையில் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், முன் விரோதம் காரணமாக இரு இளைஞர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டனரா? அல்லது காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டனரா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், கொலை சம்பவம் நிகழ்ந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
கண்காணிப்பு கேமராவில் பதிவான கொலையாளிகள் உருவம்
அதில், கொலையாளிகள் உருவம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை பதிவாகி உள்ளன. அதன் அடிப்படையில், கொலையாளிகளை கண்டறியும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர். இந்த சம்பவத்தில் காஞ்சிபுரம் எஸ்.பி. உத்தரவின்பேரில், தனிப்படைகளும் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: முதல்வராக முதல் டெல்லி பயணம்.. பிரதமர் மோடியை சந்திக்கிறார் ஜோசப் விஜய்.. நேரம் ஒதுக்க கோரிக்கை!