தென்காசி பழைய குற்றால அருவிக்கு போறீங்களா? வனத்துறை வெளியிட்ட அதிரடியான மகிழ்ச்சி செய்தி!
Tenkasi Old Courtallam: தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள பழைய குற்றால அருவிக்கு குளிக்க செல்லும் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படாது என்று வனத்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு உள்ளது. சர்ச்சைகளுக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் பழைய குற்றால அருவி அமைந்துள்ளது. இந்த பகுதிகளில் உள்ள அருவிகளில் பழைய குற்றாலமும் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இங்கு, ஜூன் மாதத்தில் குற்றால சீசன் தொடங்கும் நிலையில், அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். மூலிகை கலந்து வரும் இந்த தண்ணீரில் குளிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம் ஆகும். அதன்படி, இந்த ஆண்டு கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளது. அதன் காரணமாக குற்றாலத்தில் இந்த மாத இறுதியில் தண்ணீர் விழத் தொடங்கி குளுகுளு சீசன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக விட்டு விட்டு பெய்த மழையால் பழைய குற்றாலத்தில் சிறிதளவு தண்ணீர் விழுந்து வருகிறது.
சுற்றுலா பயணிகளிடம் நுழைவு கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு
இந்த நிலையில். பழைய குற்றால அருவிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் ரூ.20 நுழைவு கட்டணம் செலுத்தி விட்டு உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு வனத்துறை தெரிவித்து இருந்தது. அதன்படி, பழைய குற்றால அருவியில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகளிடம் தலா ரூ.20 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், உள்ளூர் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் இடையே இந்த கட்டணம் வசூலிக்கப்படக்கூடாது என்று கடும் எதிர்ப்பு கிளம்பியது.
மேலும் படிக்க: பச்சை கம்பளம் விரித்த தேயிலை தோட்டம்.. தேகத்தை முத்தமிட்டு செல்லும் மேகக்கூட்டம்.. கோடை சுற்றுலாவுக்கு வெயிட்டான ஸ்பாட்!




நுழைவு கட்டணம் தற்காலிகமாக வசூலிக்கப்படாது
பழைய குற்றால அருவிக்கு குளிக்க வந்த சில சுற்றுலா பயணிகள் கட்டணம் வசூலித்த வனத்துறை அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அத்துடன் குற்றால வியாபாரிகள் சங்கமும் இந்த கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது. இந்த நிலையில், பழைய குற்றால அருவியில் குளிப்பதற்காக வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் வசூலிக்கப்பட்டு வந்த ரூ.20 கட்டணம் தற்காலிகமாக வசூலிக்க படாது என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் – சுற்றுலா பயணிகள் மத்தியில் அதிர்ச்சி
இது தொடர்பாக உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோரிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, அதில் கிடைக்கும் முடிவுகளின் அடிப்படையில் சுற்றுலா பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கலாமா அல்லது வசூலிக்க வேண்டாமா என்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று வனத்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பழைய குற்றால அருவிக்கு குளிக்க வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது, ஒரு நபருக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: கொளுத்தும் கோடை வெயிலுக்கு குட்பை.. சிலிர்க்க வைக்கும் சிறுவாணி நீர் வீழ்ச்சி.. ஒரே நாளில் ஒரு ஜாலி ட்ரிப்!