“100 நாள் சாதனை எனப் பெருமை பேசுவது வேடிக்கை!”.. சட்டப்பேரவையில் சட்டம்-ஒழுங்கு குறித்து உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்!!
Udhayanidhi Stalin Slams TN Govt: தமிழக சட்டப்பேரவையில் தமிழகத்தின் மோசமான சட்டம்-ஒழுங்கு குறித்து உதயநிதி ஸ்டாலின் காட்டமான விவாதத்தை முன்னெடுத்தார். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நிகழ்ந்த கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் மற்றும் போதைப்பொருள் கலாச்சாரத்தால் இளைஞர்கள் பலியாவது குறித்த தரவுகளை அவர் முன்வைத்தார். 100 நாள் சாதனை என அரசு பெருமை பேசுவது வேடிக்கையானது என அவர் விமர்சித்துள்ளார்.
சென்னை, ஆகஸ்ட் 17: தமிழக சட்டமன்றத்தில் ஆளும் அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான காரசாரமான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் நிகழ்ந்த கொலைகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளை மையமாகக் கொண்டு உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கோவை கள்ளக்குறிச்சி மாணவர் அமுதன் உள்ளிட்ட இளைஞர்களின் தொடர் மரணங்கள் மற்றும் போதைப்பொருள் கலாச்சாரம் தமிழகத்தை எப்படி ஆட்கொண்டுள்ளது என்பது குறித்து அவர் வலுவான ஆதாரங்களுடன் சட்டப்பேரவையில் உரையாற்றியுள்ளார். அரசின் 100 நாள் சாதனை குறித்த விளம்பரங்களுக்குப் பின்னால் உள்ள நிதர்சனமான மோசமான சட்டம்-ஒழுங்கு சூழலை அவர் தோலுரித்துக் காட்டியுள்ளார்.
இதையும் படிக்க: “ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி!”.. 100 நாள் சாதனைத் திட்டங்களை பட்டியலிட்டு முதல்வர் விஜய் பெருமிதம்!!
தகவலைக் காட்டிக்கொடுத்த காவல்துறை:
சட்டப்பேரவையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், கோவையில் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 19 வயது பொறியியல் மாணவர் அமுதன், 20 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை முதன்மையாக முன்வைத்தார். இந்தத் தாக்குதல் ஒரு கோஷ்டி பூசல் என்று கல்வித்துறை அமைச்சர் தவறாகப் பதிவிட முயன்றதை உதயநிதி மறுத்தார். மாணவர் அமுதன், போதைப்பொருள் விற்பனை குறித்த ரகசியத் தகவல்களை காவல்துறைக்கு வழங்கியதாகவும், ஆனால் காவல்துறையினர் அந்தத் தகவலைக் குற்றவாளிகளிடமே கசியவிட்டதே அமுதனின் மரணத்திற்கு முக்கிய காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டினார். இதற்காகப் பெற்றோர்கள் தனக்குத் தொலைபேசியில் அழுதபடி கூறிய தகவல்களைச் சுட்டிக்காட்டிய உதயநிதி, காவல் துறையினரின் பொறுப்பற்ற போக்கே இதுபோன்ற உயிர்ப்பலிகளுக்குக் காரணம் என்றார்.
தொடர் கொலைகளும் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவும்:
கோவை மட்டுமன்றி, சென்னை திருவொற்றியூரில் பள்ளி மாணவர் தனுஷ் போதை கும்பலைத் தட்டிக்கேட்டதற்காக 30 பேர் கொண்ட கும்பலால் பட்டப்பகலில் அடித்துக் கொல்லப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகம் முழுவதும் நிகழ்ந்த தொடர் குற்ற சம்பவங்களை அவர் பட்டியலிட்டார். காஞ்சிபுரம் பகுதியில் இளைஞர்கள் வெட்டிப் படுகொலை, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தாய்-மகள் இரட்டைக் கொலை, சென்னை அம்பத்தூரில் பெண் கழுத்தறுப்பு எனத் தொடர் கொலைகள் குறித்து அவர் தரவுகளை வெளியிட்டார். அதேபோல், கிருஷ்ணகிரியில் ஒன்பது வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உள்ளிட்ட பாலியல் குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்தார். ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீதே பாலியல் புகார்கள் எழுவது அரசின் நிர்வாகத் திறமையின்மையைக் காட்டுவதாக அவர் விமர்சித்தார்.
இதையும் படிக்க : கோவையில் இறந்த மாணவரின் சகோதரருக்கு அரசு வேலை…நிவாரணமாக 6 லட்சம் – அமைச்சர் அறிவிப்பு
அரசின் விளம்பரங்களும் கள நிலவரமும்:
போதைப்பொருள் தடுப்பு படை உருவாக்கிவிட்டதாக அரசு பல கோடி ரூபாயில் விளம்பரம் செய்து வருகிறது, ஆனால் களத்தில் போதை கலாச்சாரம் கட்டுக்கடங்காமல் பெருகி வருகிறது என்று உதயநிதி ஸ்டாலின் சாடினார். தற்போதைய அரசு தனது 100 நாள் சாதனைகளைச் சொல்லிப் பெருமை பேசிக் கொண்டிருக்கிறது, ஆனால் இந்த 100 நாட்களில் தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு எவ்வளவு மோசமடைந்துள்ளது என்பதற்கு இந்தத் தொடர் கொலைச் சம்பவங்களே சாட்சி என்றார். இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றும், காவல்துறை தனது கடமையைச் சரியாகச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த இந்தத் தரவுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் தற்போது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.