தமிழ்நாடு பார்டரில் ஒரு குட்டி வெளிநாடு.. வார இறுதியில் ஒரு விசிட் அடிங்க.. சொர்க்கம்னா இதுதான்!
Puducherry Tourist Spot : தமிழகத்தில் பல்வேறு சுற்றுலா தலங்கள் இருக்கும் நிலையில், அருகிலேயே பாரின் நகரமான புதுச்சேரி மாநிலம் அமைந்துள்ளது. இங்கு, பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. அது என்ன என்பதை இந்தப் பதிவில் சற்று விரிவாக பார்க்கலாம் .

தமிழகத்தில் கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. இதனால் ஏராளமான பொதுமக்கள் எங்கு சுற்றுலா செல்லலாம் என்று திட்டம் தீட்ட தொடங்கி இருப்பார்கள். அவ்வாறு சுற்றுலா செல்லும் பொதுமக்கள் பெரும்பாலும் தமிழக பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பார்கள். இதை தவிர்த்து, தமிழகத்தின் அருகிலேயே அமைந்துள்ள ஃபாரின் நகரமான புதுச்சேரி மாநிலத்த்துக்கு சுற்றுலா சென்று வரலாம். இந்த மாநிலத்தில், ஒயிட் டவுன் என்ற பகுதி மிகவும் பிரபலமாக விளங்கி வருகிறது.

ஏனென்றால், இங்கு பிரஞ்சு கலாச்சாரத்தை நினைவு கூறும் வகையிலான கட்டிடங்கள், அதற்கு தீட்டப்பட்டிருக்கும் வர்ண பூச்சுக்கள், இரவை பகலாக்கக் கூடிய வகையில் அமைக்கப்பட்டிருக்கும் மின் விளக்குகள் ஆகியவை தான் காரணமாகும். புதுச்சேரி மாநிலத்துக்குள் நுழைந்து, ஒயிட் டவுன் நகரப் பகுதியில் வந்ததுமே மேற்கண்ட பாரின் அனுபவத்தை நாம் கண் கூறாக கண்டு ரசிக்க முடியும். அத்துடன், ஒயிட் டவுன் நகர பகுதியில் உள்ள சாலைகளில் காலாற நடந்து சென்று கொண்டே பிரெஞ்சு கலாச்சாரத்தின் கீழ் இருந்த தற்போதும் பழைமை மாறாத கட்டிடங்கள் உள்ளிட்டவற்றை பார்த்துக் கொண்டே பரவசம் அடையலாம்.

அதன் அருகிலேயே அமைந்துள்ளது ராக் பீச். இந்த பகுதியில் செயற்கையாக உருவாக்கப்பட்ட மணல் பரப்புகள், அதற்கு அப்பால் அமைக்கப்பட்டுள்ள கல் குவியல்கள், அதில் வீசி வரும் கடல் அலைகள், நம் தேகத்தை தழுவி செல்லும் கடல் காற்று அனைத்தையும் உள்ளம் குளிர அனுபவித்து மகிழலாம். இதை முடித்து விட்டு அருகிலேயே அமைந்துள்ள பாண்டி மெரீனா கடற்கரைக்கு செல்லலாம். அங்கு, நாம் திரைப்படங்களில் பார்ப்பது போன்ற வெள்ளை நிறத்திலான மணல் பரந்து விரிந்து கிடக்கும்.

அதில், கண்காணிப்பு கோபுரங்கள், நிழல் குடைகள், மணல் பரப்புகளுக்கு மத்தியில் நீண்ட தூர தொலைவில் அமைந்திருக்கும் தார் சாலை வழியாக நடந்து சென்றால் கடலின் குறிப்பிட்ட பகுதியை அடையலாம். அங்கிருந்து படகுகள் பயணம் செய்வதை பார்த்து மகிழலாம். இதை முடித்துக் கொண்டு சற்று தொலைவில் அமைந்துள்ள சுண்ணாம்பாறு படகு குழாமில் முகாமிடலாம். அங்கு, படகு குழாமிலிருந்து பல்வேறு வகையான படகுகளில் அலையாத்தி காடுகள் வழியாக பயணம் செய்து தனி தீவு போல அமைந்திருக்கும் பாரடைஸ் பீச்சுக்கு சென்றடையலாம்.

அங்கு 4 புறமும் கடல் சூழ மையப் பகுதியில் பறந்து விரிந்து கிடக்கும் வெள்ளை நிற கடல் மணலில் கடல் அழகை கண்டு ரசிக்கலாம். அத்துடன், ஆன்மீகப் பயணத்துக்கு ஏற்ற இடமாகவும் புதுச்சேரி மாநிலம் விளங்கி வருகிறது. ஏனென்றால், இந்த மாநிலத்தில் ஏராளமான சித்தர்கள் கோவில்கள், பிரபலமான மணக்குள விநாயகர் கோவில் உள்ளிட்டவை அமைந்துள்ளன. அப்புறம் என்ன தமிழகத்தின் அருகிலேயே உள்ள ஃபாரின் நகரத்துக்கு டூர் செல்லலாமா. ஒருமுறை சென்று தான் பாருங்களேன்.