“100 நாளில் எதையும் செய்யவில்லை!”.. தவெகவை கடுமையாக விமர்சித்த துரைமுருகன்!!
Duraimurugan Criticizes TVK 100 Days Rule: "100 நாட்களில் பெரிய சாதனை செய்யாவிட்டாலும், ஒரு சிறிய குன்று அளவுக்காவது சாதித்திருக்க வேண்டாமா?" என தவெக அரசினை திமுக மூத்த தலைவர் துரைமுருகன் கடுமையாக விமர்சித்துள்ளார். தவெக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வெறும் பேச்சளவில் மட்டுமே செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டிய செய்தி தொகுப்பு.
சென்னை, ஆகஸ்ட் 17: தமிழகத்தில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள் மற்றும் அவர்களின் முக்கிய அறிவிப்புகள் குறித்து அரசியல் தலைவர்கள் தொடர்ந்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில், தவெகவின் 100 நாட்கள் நிறைவு பெற்றதை முன்னிட்டு, அக்கட்சியின் செயல்பாடுகள் குறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் மிகவும் காரசாரமான பதிலை அளித்துள்ளார். தவெகவினர் வெறும் பேச்சளவில் மட்டுமே செயல்படுகிறார்கள் என்றும், நடைமுறையில் எந்தவிதமான சாதனையையும் அவர்கள் செய்யவில்லை என்றும் அவர் வெளிப்படையாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிக்க : “100 ஆண்டா வாழ்ந்த மக்களை ஆக்கிரமிப்புன்னு சொல்றதா?”.. சீமான் கொந்தளிப்பு!
தவெகவினர் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்:
தவெகவின் 100 நாள் செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், “100 நாட்களில் யாரும் பெரிய இமயமலை அளவுக்கு சாதனை செய்ய முடியாது என்றாலும், ஒரு சிறிய குன்று அளவுக்காவது சாதனையைச் செய்து காட்டியிருக்க வேண்டாமா? ஆனால், நாங்கள் இதைச் சாதித்தோம் என்றுச் சொல்வதற்கு கூட அவர்களிடம் எதுவுமே இல்லை” என்று தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்த அவர், தவெகவினர் தொடர்ந்து மேடைகளிலும் ஊடகங்களிலும் பேசி மட்டுமே வருகிறார்களே தவிர, செயல்பாட்டளவில் அல்லது காரியத்தில் எந்த இடத்திலும் களமிறங்கவில்லை என்று விமர்சித்தார்.
தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை:
தவெக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் குறித்துப் பேசிய துரைமுருகன், “அவர்கள் தங்களது தேர்தல் வாக்குறுதிகள் பக்கமே செல்லவில்லை. பெண்களுக்கான நிதியுதவி, ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள் போன்ற பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்தார்கள். ஆனால் அவற்றில் ஒன்றைக் கூட நிறைவேற்றவோ அல்லது செயல்படுத்துவதற்கான நடவடிக்கையிலோ அவர்கள் இறங்கவில்லை. சும்மா பேசிக்கொண்டே இருப்பதால் எந்தப் பயனும் இல்லை” என்று குறிப்பிட்டார்.
மற்றவர்களைக் குறை சொல்வதிலேயே தவெகவினர் கவனம் செலுத்தி வருவதாகவும், அவர்கள் தங்களது வாக்குறுதிகளை மறந்துவிட்டு அரசியல் பேசுவது வியப்பாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது என்றும் துரைமுருகன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையும் படிக்க : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ மறு வழக்குப்பதிவு.. சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை!
கொடுத்த வாக்குறுதிகள் என்னாச்சு?
திமுக ஆட்சியில் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கான உரிமைத் தொகையாக ரூ.1,000 வழங்கி அதைச் சிறப்பாகச் செயல்படுத்திக் காட்டினார். ஆனால் தவெகவினரோ, நாங்கள் கூறிய திட்டங்களையே வேறு விதமாகப் பேசி அரசியல் செய்கிறார்களே தவிர, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வரவில்லை” என்றும் சுட்டிக்காட்டினார். முந்தைய திமுக அரசு செயல்படுத்தி வந்த மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட நலத்திட்டங்களுடன் தவெகவின் வாக்குறுதிகளை ஒப்பிட்டு துரைமுருகன் பேசியிருப்பது, இரு தரப்பிற்கும் இடையேயான அரசியல் மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.