“100 ஆண்டா வாழ்ந்த மக்களை ஆக்கிரமிப்புன்னு சொல்றதா?”.. சீமான் கொந்தளிப்பு!
Meghamalai Eviction Issue: செய்தியாளர் சந்திப்பில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மேகமலையில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கூறி வெளியேற்றுவது கண்டிக்கத்தக்கது என்றும், டாக்டர் கிருஷ்ணசாமி, வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்களுடன் இணைந்து தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.
சென்னை, ஆகஸ்ட் 16: தமிழ்நாடும் தமிழ் மக்களும் எதிர்கொள்ளும் பல்வேறு உரிமைச் சிக்கல்கள் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்குத் தனித்தனியாகப் போராடாமல், ஒரே அரசியல் குடையின் கீழ் ஒருங்கிணைந்து பெரும் படையாகப் போராடத் தமிழ் தேசிய இயக்கங்களும் தலைவர்களும் முடிவெடுத்துள்ளனர். இந்த கூட்டு ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அரசு மேகமலை மற்றும் மாஞ்சோலை பகுதிகளில் வாழும் எளிய மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்ற பெயரில் அகற்றுவதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்தார்.
இதையும் படிக்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ மறு வழக்குப்பதிவு.. சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை!
தமிழ் தேசிய அமைப்புகளின் ஒருங்கிணைப்பு:
காவிரி நதிநீர் பிரச்சனை, மேகதாட்டு அணை விவகாரம், தொகுதி மறுசீரமைப்பு மற்றும் மாநிலத்தில் அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்கள் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்குத் தனித்தனியாகப் போராடுவதை விட, தமிழ் தேசிய இனத்தின் பாதுகாப்பான வாழ்விற்காக ஒருங்கிணைந்து செயலாற்றுவது அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டது. புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், தனியரசு, பூவை ஜெகன்மூர்த்தி மற்றும் தமீமுன் அன்சாரி போன்ற தலைவர்கள் ஒன்றுதிரண்டு இந்த கூட்டுப் போராட்டக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளனர்.
மேகமலை, மாஞ்சோலை மக்கள் வெளியேற்றம்:
நூறாண்டுகளுக்கும் மேலாக மேகமலையில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் எளிய உழைக்கும் மக்களை “ஆக்கிரமிப்பாளர்கள்” என்று அரசு முத்திரை குத்தி அப்புறப்படுத்துவது கொடூரமான செயல் என சீமான் குற்றம்சாட்டினார். நிலமற்ற கூலிகளாக்கப்பட்டு விரட்டப்பட்ட வரலாற்றைச் சுட்டிக்காட்டிய அவர், மேகமலையில் பெரிய முதலாளிகள் கட்டியுள்ள சொகுசு விடுதிகளை (Resorts) விட்டுவிட்டு சாதாரணக் குடிமக்களின் வாழ்விடங்களைப் பிடுங்குவது நியாயமற்றது என்றும், மக்களைச் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்குவது அறவே ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் கொந்தளித்தார்.
வைகை நதி பாதுகாப்பும், சட்டப்போராட்டமும்:
கேரளத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் வைகை நதியைப் பாதுகாப்பதாகக் கூறித் தொடர்ந்த பொதுநல வழக்கையும், நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் அளித்த பதிலையும் சுட்டிக்காட்டிய சீமான், உண்மையிலேயே வைகை நதியில் மணல் அள்ளப்பட்டபோதும், கழிவுநீர் கலக்கப்பட்டபோதும் யாரும் குரல் கொடுக்கவில்லை என்று வேதனை தெரிவித்தார். நீதிமன்றம் ஆகஸ்ட் 28-க்குள் மக்களை வெளியேற்றத் துணை ராணுவப் படையைப் பயன்படுத்த உத்தரவிடும் நிலை உருவாகியிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உடனடியாக மக்கள் களமிறங்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
இதையும் படிக்க: “உதவி செஞ்ச பிறகுதான் உள்ள மம்மூட்டி சார் இருக்குறதே தெரிஞ்சிது!”.. மதுரை நெடுஞ்சாலையில் நள்ளிரவு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!
தொடர் போராட்டங்கள் அறிவிப்பு:
சென்னையில் ஆதி தமிழ் குடிகளைச் செம்மஞ்சேரி, கண்ணகி நகர் போன்ற புறநகர்ப் பகுதிகளுக்குத் தள்ளியது போல, தற்போது மேகமலை மக்களுக்கும் துரோகம் இழைக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டது. எனவே மேகமலை மக்கள் வெளியேற்றம், மாஞ்சோலை தொழிலாளர்கள் பிரச்சனை மற்றும் தொகுதி மறுசீரமைப்பு போன்ற முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்துத் தமிழ்நாட்டின் முக்கிய அமைப்புகள் இணைந்து தொடர் அறப்போராட்டங்களை மேற்கொள்ளவுள்ளன. இதற்கான விரிவான போராட்ட தேதிகள் மற்றும் திட்டங்களை ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் விரைவில் அறிவிப்பார்கள் என சீமான் தனது பேட்டியில் தெரிவித்தார்.