பைக் மீது மோதிய அரசுப் பேருந்து.. சிகிச்சைக்கு சென்றவர் உள்பட மூவர் பலி.. கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த கொடூர விபத்து!
Puducherry 3 Killed In Accident: புதுச்சேரி மாநிலத்தில் இரு சக்கர வாகனம் மீது அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக கோட்டக்குப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.
புதுச்சேரி மாநிலம், காலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன் ( 29 வயது). இவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, இவரது மைத்துனர்களான கார்த்திக் மற்றும் ஸ்டாலின் ஆகிய இருவரும் சிலம்பரசனை புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அதன்படி, இவர்கள் மூவரும் இரு சக்கர வாகனத்தில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, பெரிய முதலியார் சாவடி மதுவிலக்கு சோதனை சாவடி அருகே இவர்களது இரு சக்கர வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது, சென்னையில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு அரசு விரைவு பேருந்து அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக முன்னாள் சென்று கொண்டிருந்த சிலம்பரசனின் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
மூன்று பேர் மீது ஏறி இறங்கிய அரசுப் பேருந்து
இதில், இரு சக்கர வாகனம் தனது கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்து கொண்டிருந்த கார் மீது மோதியது. இந்த கொடூர விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சிலம்பரசன், கார்த்திக், ஸ்டாலின் ஆகியோர் நிலை தடுமாறி சாலையில் ஆங்காங்கே விழுந்தனர். அப்போது, அவர்களது பைக் மீது மோதிய அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து இரு சக்கர வாகனம் மீது ஏறியதுடன், சாலையில் கிடந்த மூவர் மீதும் ஏறி இறங்கியது. இதில், மூன்று பேரும் பலத்த காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் சாலையில் உயிருக்கு போராடினர்.
மேலும் படிக்க: பிரதமர் மோடி வேண்டுகோள்: தமிழக ஆளுநரின் கான்வாய் வாகனங்கள் 4- ஆக குறைப்பு!




சம்பவ இடத்திலேயே உயிரிழந்த மூவர்
உடனே, பேருந்தில் பயணித்தவர்கள் மற்றும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கோட்டகுப்பம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், கோட்டகுப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவர்கள் மூவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, மூவரின் சடலங்கள் உடல் கூறாய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது.
தூக்க கலக்கத்தால் நேர்ந்த சாலை விபத்து
பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக சிலம்பரசன் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அரசு விரைவு பேருந்தின் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்த காரணத்தால் இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் அரசு பேருந்தின் ஓட்டுநரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: தேர்தல் தோல்வி எதிரொலி.. திமுக அமைத்த கள ஆய்வு குழுவில் இடம் பெற்றவர்கள் யார்.. யார்.. முழு விவரம் உள்ளே!