பள்ளிக்கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கீடு குறைப்பா? – திமுக விமர்சனங்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில்
சட்டமன்றத்தில் நிதியமைச்சர் மரிய வில்சன் ஆகஸ்ட் 5, 2026 இன்று பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில், பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.44,527 கோடி நிதியை அறிவித்தார். இது கடந்த ஆண்டை விட மிகக்குறைவு என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் விளக்கமளித்துள்ளார்.
சென்னை, ஆகஸ்ட் 5 : தவெக ஆட்சிக்கு வந்த பின் தனது முதல் பட்ஜெட்டை சட்டமன்றத்தில் நிதியமைச்சர் மரிய வில்சன் ஆகஸ்ட் 5, 2026 இன்று தாக்கல் செய்தார். அதில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.44,527 கோடி நிதியை அறிவித்தார். இது கடந்த ஆண்டுகளை விட குறைவு என விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக பள்ளிக்கல்வித்துறைக்கு குறைவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். இந்த நிலையில் திமுக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு செலவிடப்பட்டதைவிட சுமார் ரூ.2176 கோடி கூடுதலாக ஒதுக்கீடு தற்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் விளக்கமளித்துள்ளார்.
பள்ளிக்கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கீடு குறைப்பா?
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், தமிழக வெற்றிக்கழக பட்ஜெட்டே பள்ளிக்கல்விக்கு உண்மையான நிதி உயர்வை தந்துள்ளது. கடந்த 2025-26 திமுக பட்ஜெட்டில் பள்ளிக்கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.46,767 கோடி. இதில், இடைக்கால பட்ஜெட்டுக்கு முன்பு வரை செலவிடப்பட்ட தொகை 42,351 கோடி மட்டும் தான். திமுகவின் இடைக்கால பட்ஜெட்டில் பல ஊதிய வரம்புகளையும், செலவினங்களையும் மிகை மதிப்பீடு செய்துள்ளனர் என்றார்.
இதையும் படிக்க : Tamil Nadu Budget 2026 Update: தமிழ்நாடு பட்ஜெட் அறிக்கையை தமிழில் பதிவிறக்கம் செய்வது எப்படி?




மேலும் பேசிய அவர், திமுகவின் கடைசி பட்ஜெட்டான 2026-27 இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி என அதிகரிக்கப்பட்டது. பட்ஜெட்டில் உண்மையாக செலவு செய்யப்பட்டதைவிட சுமார் ரூ. 6003 கோடி காரணமே இல்லாமல் உயர்த்தப்பட்டது. காரணமற்ற இந்த உயர்வுக்கு பின்னால் இருந்தது தவறான கணக்கீடுகளும், தேவையற்ற நிதி உயர்வுகளும் மட்டும. திமுக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு செலவிடப்பட்டதைவிட தற்போது சுமார் ரூ.2176 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் செப்.8 வரை நடைபெறும்.. சபாநாயகர் அறிவிப்பு!
முன்னதாக தவெக அரசின் பட்ஜெட்டில் பள்ளி கல்வித்துறைக்கு குறைவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது பதிவில், “கல்வி மட்டுமே யாராலும் பறிக்க முடியாத சொத்து” என உரக்கச் சொல்லும் நம்முடைய கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு ஏறுமுகத்திலேயே இருந்தது. ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டதைக் காட்டிலும், குறைவான நிதியே தற்போதைய அரசால் ஒதுக்கப்படுவது இன்று வெளியான நிதிநிலை அறிக்கை மூலம் தெரியவருகிறது. “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்றென்றும் தொடர்வதை உறுதிசெய்ய வேண்டியது அரசின் கடமை என்பதை மறந்துவிட வேண்டாம். என்று குறிப்பிட்டிருந்தார்.