செல்போன் பேச்சால் நேர்ந்த கொடூரம்.. அக்காவை வெட்டி சாய்த்த தம்பி.. நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
Nellai Murder: திருநெல்வேலி மாவட்டத்தில் செல்போன் உபயோகித்ததை கண்டித்து கேட்காத ஆத்திரத்தில் அக்காவை உடன் பிறந்த சகோதர் கொடூரமாக வெட்டி கொலை செய்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிந்து இளைஞரை கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி மேல கிராமம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி கண்ணகி. தம்பதிக்கு ராமலட்சுமி ( 23 வயது) என்ற மகளும், ராகுல் ( 22 வயது), முத்து கிருஷ்ணன் ( 21 வயது) ஆகிய இரு மகன்களும் உள்ளனர். முத்து கிருஷ்ணன் வெளியூரில் உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், ராமலட்சுமி எப்போதும் செல்போனை உபயோகித்து கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், அவ்வப்போது தனியாக செல்போனில் பேசுவதையும் வழக்கமாக வைத்திருந்ததாக தெரிகிறது. இதனை, அவரது சகோதரர் முத்துகிருஷ்ணன் கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சுத்தமல்லியில் நடைபெற்ற கோவில் திருவிழாவுக்காக முத்து கிருஷ்ணன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்த நிலையில், வழக்கம்போல ராமலட்சுமி வீட்டில் செல்போனில் தனியாக பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இதனை பார்த்த முத்துகிருஷ்ணன் அவரை கண்டித்துள்ளார்.
அரிவாளால் அக்காவை வெட்டிய சகோதரர்
இதை மீறியும் அவர் செல்போனை உபயோகித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை முத்துகிருஷ்ணன் மீண்டும் கண்டித்து நிலையில், இருவர் இடையே வாய் தகராறு ஏற்பட்டு வாக்குவாதமாக மாறியது. இதில், ஆத்திரம் அடைந்த முத்துகிருஷ்ணன் வீட்டில் இருந்த அரிவாளால் ராமலட்சுமி சரமாரியாக வெட்டினார். அவரது சத்தம் கேட்டு அவரது பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராமலட்சுமி பார்த்து அதிர்ச்சி அடைந்ததுடன் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும் படிக்க: செல்போன் மோகத்தில் மூழ்கிய மகள்.. ஒரு நொடி கண்டித்த தந்தை.. மறு நொடியே மாணவி எடுத்த விபரீத முடிவு!




இளைஞரை கைது செய்த சுத்தமல்லி போலீசார்
அங்கு, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை தொடர்ந்து, அவரது சடலம் உடல் கூறாய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சுத்தமல்லி காவல் நிலையத்தில் ராமலட்சுமியின் தந்தை புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், சம்பவ இடத்தில் விசாரணை செய்த போலீசார் ராமலட்சுமியின் சகோதரர் முத்துகிருஷ்ணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
சுத்தமல்லயில் பெரும் பரபரப்பு
பின்னர், அவரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து செல்போன் பேசி வந்த அக்காவை கண்டித்தும் கேட்காததால் அவரை அரிவாளால் உடன்பிறந்த தம்பியே வெட்டி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: மீண்டும் ஒரு லாக்அப் டெத்? போலீஸ் விசாரணைக்கு சென்ற ஓட்டுநர் உயிரிழப்பு.. எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் நடந்தது என்ன!