ராஜ்யசபா இடைத்தேர்தல்.. போட்டியின்றி தேர்வானார் பிரவீன் சக்கரவர்த்தி!
Rajya Sabha By Election Praveen Chakravarty Elected : ராஜ்யசபா இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தமிழக சட்டமன்ற தேர்தலில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால், அவர் வகித்து வந்த மாநிலங்களவை எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, தமிழகத்திற்கான ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த ஜூன் 1- ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. இதில், தமிழக வெற்றி கழகம் சார்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி மற்றும் 14 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த ஜூன் 9- ஆம் தேதி நடைபெற்றது. இதில், 13 சுயேச்சை வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை எம்எல்ஏக்கள் ஆதரிக்காததால் நிராகரிக்கப்பட்டது. அதே வேளையில், பிரவீன் சக்கரவர்த்தியின் வேட்பு மனு எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஏற்கப்பட்டது.
போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் பிரவீன் சக்கரவர்த்தி
இந்த நிலையில், ராஜ்ய சபா எம்பி இடைத்தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு இன்று வியாழக்கிழமை ( ஜூன் 11) கடைசி நாளாகும். இதில், பிற்பகல் 3 மணியுடன் அவகாசம் முடிவடைந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். ராஜ்யசபா இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவை 10 எம்எல்ஏக்கள் முன்மொழிய வேண்டும். மேலும், 10 எம்எல்ஏக்கள் வழிமொழிய வேண்டும்.
மேலும் படிக்க: “தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும்; சிபிஐ-யின் முடிவை ஏற்கத்தான் வேண்டும்”.. ப.சிதம்பரம் அதிரடி!




பிரவீன் சக்கரவர்த்தியிடம் வெற்றி சான்றிதழ் அளிப்பு
தற்போது தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 13 சுயேச்சை வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை முன் மொழியவும், வழிமொழியவும் எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லை. இதனால், அவர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதில், எஞ்சியிருந்த காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தியின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி ஏற்றதுடன், அவரை மாநிலங்களவை எம்பி யாக தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை வழங்கினார். தமிழக வெற்றி கழக கூட்டணியில் அதிக எம்எல்ஏக்கள் இருப்பதால் இந்த எம்பி பதவி அந்த கட்சியை சேர்ந்தவருக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
முதல் எம்பி பதவியை காங்கிரஸுக்கு விட்டு கொடுத்த தவெக
ஆனால், தவெக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தங்கள் கட்சியை சேர்ந்தவருக்கு எம்பி பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இதனை ஏற்றுக் கொண்ட முதல்வர் விஜய் மாநிலங்களவை எம்பி பதவியை காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு மிக நெருக்கமானவருமான பிரவீன் சக்கரவர்த்திக்கு வழங்கியது குறிப்பிடப்பட்டது.
மேலும் படிக்க: “அதிமுகவுடன் அமமுக இணைப்பு?” என்ன சொல்கிறார் டிடிவி தினகரன்?