சிங்கப்பெண் படையின் முதல் வழக்கே தவெக நிர்வாகி மீதுதானா? எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி!
Edappadi Palaniswami : தமிழகத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு கிடைத்த முதல் வழக்கு பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீதா என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்து உள்ளார் .
தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடி படையை முதல்வர் விஜய் தொடங்கி வைத்துள்ளார். இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழக அரசு மீது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்வர் விஜய்யின் ரசிகையை தவெகவை சேர்ந்த நிர்வாகிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிய சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணன் ஆதரவில் இந்த கொடூரத்தை தவெக கட்சியை சேர்ந்த இருவர் அரங்கேற்றி உள்ளதாக தெரிகிறது. இந்த சம்பவத்தை மறைப்பதற்காக அந்த பெண்ணிடம் சரவணன் எம். எல். ஏ., அமைச்சரிடம் கூறி வேலை வாங்கித் தருவதாக சமரசம் பேசியதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
சிங்கப்பெண் படையின் முதல் வழக்கு தவெக மீதா
அப்படி என்றால் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படைக்கான முதல் வழக்கு தவெக வழக்கா அதுவும் ஆளுங்கட்சி எம்எல்ஏ எப்படியான செயலுக்கு சமரசம் பேசியதை முதல்வர் ஏற்றுக்கொள்வாரா. முதல்வர் விஜயை திரையில் ரசித்து வளர்ந்த பெண்ணுக்கு, உங்களது ஆட்சியில் உங்கள் கட்சியினரால் நடைபெற்றுள்ள இந்த கொடுமைக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை முதல்வருக்கு இருப்பதை அவர் உணர்கிறாரா. அமைச்சருக்கு தெரியும், மேலிடத்துக்கு தெரியும் என்று தெனாவட்டு பேச்சுகள் வருகிறது என்றால் அப்படி என்ன மேலிடம், யார் அது, முதல்வரா அல்லது முதல்வரை தாண்டிய ஏதேனும் பவர் சென்டர் உள்ளதா.
மேலும் படிக்க: வளிமண்டல சுழற்சியால் வெளுத்து வாங்கப்போகும் மழை: 7 நாட்களுக்கு எங்கெல்லாம் அலர்ட்?




முதல்வர் விஜய்க்கு தெம்பு – திராணி இருக்கிறதா
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழாவில் சிங்கிள் டேக்கில் முதல்வர் விஜய் பேசிய வசனங்களை எல்லாம் உங்கள் கட்சியினரை பார்த்து பேசுங்கள். பாலியல் வன்கொடுமைக்கு வக்காலத்து வாங்கி சமரசம் பேசி மறைக்க முயன்ற தமிழக வெற்றிக் கழகத்தின் எம்எல்ஏ வை பதவி ராஜினாமா செய்ய வைத்து கைது செய்வதற்கு முதல்வர் விஜய்க்கு தெம்பு, திராணி இருக்கிறதா. வேறொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நடந்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளதாக செய்திகள் வருகின்றன.
யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதனால், இந்த கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கை எந்த அரசியல் இடையூறும் இன்றி விசாரணை செய்து குற்றவாளிகள் மீதும், குற்றத்துக்கு துணை போனவர்கள் மீதும், அது யாராக இருந்தாலும், எந்த எம்எல்ஏவாகவும், எந்த அமைச்சராகவும் இருந்தாலும் கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இன்றைய பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: தமிழகத்தில் ஜூன் 15 முதல் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏறுமா?