வேளாண் பட்ஜெட் 2026.. பச்சைத் துண்டுடன் களமிறங்கிய 10 அமைச்சர்கள்.. விவசாயிகளிடம் கருத்துக் கேட்பு!!
TN Agriculture Budget 2026: தமிழக வேளாண் பட்ஜெட் தயாரிப்பு தொடர்பாக, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 10 அமைச்சர்கள் பச்சைத் துண்டு அணிந்து பங்கேற்ற பிரம்மாண்ட கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. 10 ஆண்டுகளில் இல்லாத வறட்சி நிலவும் சூழலில், ஆகஸ்ட் 6-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள வேளாண் பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை, ஜூலை 27: தமிழக அரசின் தனித்துவமான வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிப்பு தொடர்பான இறுதிக்கட்ட ஆலோசனைகள் தீவிரமடைந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் விவசாயிகள் மற்றும் விவசாயச் சங்கப் பிரதிநிதிகளுடனான பிரம்மாண்ட கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக, விவசாயிகளின் கோரிக்கைகளைக் நேரடியாகக் கேட்டறிய 10 அமைச்சர்கள் ஒரே மேடையில் பச்சைத் துண்டு அணிந்து பங்கேற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதையும் படிக்க: TN Budget 2026: பள்ளி கல்வித்துறை பட்ஜெட் எதிர்பார்ப்புகள் என்னென்ன?.. முழு விவரம்!!
பச்சைத் துண்டுடன் களமிறங்கிய 10 அமைச்சர்கள்:
வேளாண்மைத் துறை மட்டுமின்றி, விவசாயத்துடன் தொடர்புடைய பல்வேறு முக்கிய துறைகளின் அமைச்சர்களும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நேரில் பங்கேற்றனர். வேளாண்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, சிறுகுறு நடுத்தரத் தொழில்துறை, கைத்தறித்துறை, மீன்வளத்துறை, கால்நடைப் பராமரிப்புத் துறை, பால்வளத்துறை, வனத்துறை, உணவுத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை ஆகிய 11 துறைகளின் அமைச்சர்களும் பச்சைத் துண்டு அணிந்து, விவசாயிகளுக்கு ஆதரவாக அமர்ந்து அவர்களின் கோரிக்கைகளைக் குறிப்பெடுத்துக் கொண்டனர்.
இக்கூட்டத்தில் சேகரிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்து, இன்று மாலை முதலமைச்சருடன் நடைபெறும் உயர் ஆலோசனைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, இறுதி பட்ஜெட்டில் சேர்க்கப்படவுள்ளன.
10 ஆண்டுகளில் இல்லாத வறட்சி:
தற்போது தமிழகத்தில் காவேரி உள்ளிட்ட முக்கிய நதிகளில் நீர்வரத்து குறைந்து, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வறட்சியான சூழல் நிலவுகிறது. இந்த இக்கட்டான காலகட்டத்தில் வேளாண் பட்ஜெட்டில் கீழ்க்கண்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். தண்ணீர் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, அதிக நீர் தேவைப்படும் நெல் சாகுபடியைத் தவிர்த்து, சிறுதானியங்கள் மற்றும் மா, பலா, வாழை உள்ளிட்ட பழங்கள் சாகுபடிக்கு அதிக மானியம் வழங்க வேண்டும்.
மாதாந்திர உதவித்தொகை:
மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படுவதைப் போல, வறட்சி மற்றும் விவசாயப் பணிகள் இல்லாத காலங்களில் விவசாயத் தொழிலாளர்களுக்கு மாதாந்திர இழப்பீட்டுத் தொகை வழங்கிட வேண்டும். விவசாயப் பணிகளுக்கு ஆள் பற்றாக்குறை நிலவுவதால், அக்ரிகல்ச்சர் இன்ஜினியரிங் துறை மூலம் நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை எவ்வித முறைகேடுமின்றி அனைத்து விவசாயிகளுக்கும் மானிய விலையில் வழங்க வேண்டும்.
மழைக்காலங்களில் வீணாகக் கடலில் கலக்கும் நீரைத் தடுக்க ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும்; இஸ்ரேல் நாட்டைப் போல நவீன நீர் மேலாண்மைத் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.
இதையும் படிக்க: தமிழ்நாடு பட்ஜெட் நடைமுறை.. சட்டப்பேரவையில் என்ன நடக்கும்? தாக்கல் முதல் ஒப்புதல் வரை ஒரு பார்வை!
ஆகஸ்ட் 6-ல் வேளாண் பட்ஜெட் தாக்கல்:
திமுக ஆட்சிக் காலத்தில் தனி வேளாண் பட்ஜெட் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த பட்ஜெட்டில் வேளாண் துறைக்காக ₹30,000 கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு வறட்சி மேலாண்மை மற்றும் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் 2026-27-ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கை அதிகாரப்பூர்வமாகத் தாக்கல் செய்யப்படவுள்ளது.