“சட்டம் – ஒழுங்கு பரபரப்புக்கு மத்தியில் கலகல சம்பவம்” இரு பெண்களுடன் வாழ விருப்பம்.. திண்டுக்கல் காவல் நிலையத்தில் இளைஞர் பிடிவாதம்!
Dindigul Young Man : திண்டுக்கல் மாவட்டத்தில் காவல் நிலையத்தில் இரு பெண்களை திருமணம் செய்த இளைஞர் இருவருடனும் சேர்ந்து வாழ விருப்பம் இருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தார். இதில், போலீசார் பஞ்சாயத்து பேசி தீர்வு வழங்குவதற்குள் அங்கு பரபரப்பு ஏற்பட்டது .
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள செங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சடையாண்டி ( 28 வயது). வெல்டிங் தொழிலாளியான இவருக்கு சுமதி ( 26 வயது) என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், சடையாண்டி திடீரென வீட்டிலிருந்து மாயமானார். அவரது செல்ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இது குறித்து வடமதுரை காவல் நிலையத்தில் அவரது சுமதி புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து சடையாண்டியை தேடி வந்தனர். இதில், புத்தூர் பிச்சம்பட்டியை சேர்ந்த நாகேஸ்வரி ( 21 வயது) என்ற பெண்ணை திருமணம் செய்து அவருடன் வாழ்ந்து வந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து, சடையாண்டி, நாகேஸ்வரி மற்றும் சுமதி ஆகியோரை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில், நாகேஸ்வரியுடன், சடையாண்டி பல ஆண்டுகளாக பழகி வந்துள்ளார்.
2- ஆவது திருமணம் செய்து கொண்ட இளைஞர்
அவ்வப்போது, அவருடன் செல்போனில் பேசி வந்த சடையாண்டியை, அவரது முதல் மனைவி சுமதி கண்டித்துள்ளார். இதில், ஏற்பட்ட வாக்குவாதத்தால், வீட்டிலிருந்து வெளியேறிய அவர், நாகேஸ்வரி திருமணம் செய்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். மேலும், தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருப்பதை நாகேஸ்வரியிடம், சடையாண்டி மறைத்து திருமணம் செய்துள்ளது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக சடையாண்டி போலீசாரிடம் கூறுகையில், தனது முதல் மனைவி சுமதி என்னுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
மேலும் படிக்க: பண மோசடி வழக்கு – விசாரிக்க சென்ற காவலர் மீது நாயை ஏவி விட்டு கடிக்க வைத்த கொடூரம்




2 மனைவிகளுடனும் சேர்ந்த வாழ விருப்பம்
இதனால் தான் நான் 2- ஆவதாக திருமணம் செய்து உள்ளேன். எனக்கு 2 மனைவிகளுடன் சேர்ந்து வாழ சம்மதம். எனவே, இரு மனைவிகளையும் என்னுடன் அனுப்பி வையுங்கள். நான் இருவரையும் நன்றாக கவனித்துக் கொள்கிறேன் என்று சடையாண்டி போலீசாரிடம் தெரிவித்தார். இதை கேட்ட போலீசார் கடும் அதிர்ச்சியில் உறைந்தனர். அப்போது, போலீசாருக்கு மேலும் அதிர்ச்சியூட்டும் விதமாக நாகேஸ்வரியும், நான் சடையாண்டியுடன் வாழ விரும்புவதாக தெரிவித்தார். அப்போது, சுமதி தனக்கு இரு குழந்தைகள் இருப்பதாகவும், அவர்களது எதிர்காலம் கருதி சடையாண்டியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு போலீசாரிடம் கேட்டுக் கொண்டார்.
பஞ்சாயத்தில் இறுதி தீர்ப்பு வழங்கிய போலீசார்
அப்போது, ஒரு முடிவுக்கு வந்த போலீசார் முதல் மனைவி இருக்கும் போது 2- ஆவது திருமணம் செய்வது சட்டப்படி குற்றமாகும். எனவே, உங்கள் மீது வழக்கு பதிவு செய்தால் சிறைக்கு செல்ல வேண்டும் என்று சடையாண்டியிடம் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். அத்துடன், நாகேஸ்வரிக்கும் அறிவுரை கூறி அவரது பெற்றோருடனும், சடையாண்டியை அவரது முதல் மனைவி சுமதியுடன் சேர்ந்து வாழுமாறு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க: பாஜகவின் அலிஷா அப்துல்லா சர்ச்சை வீடியோ விவகாரம்.. பிரபல யூடியூபர் முக்தார் கர்நாடகாவில் கைது!