மின்தடை புகார்.. அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு.. ஆக்ஷனில் இறங்கிய மின் வாரிய தலைவர்!
Tamil Nadu Power Outage Complaints: தமிழகத்தில் அறிவிக்கப்படாமல் ஏற்பட்டு வரும் மின் வெட்டு தொடர்பாக அந்த துறையின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு துறையின் வாரிய தலைவர் ராதா கிருஷ்ணன் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவு குறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் சில இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டுகள் ஏற்பட்டு வருகின்றன. இது தொடர்பாக, தமிழ்நாடு மின்சார வாரியத்துறை ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த துறையி வாரிய தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மின் கோளாறுகள் தொடர்பாக சமூக வலைதளங்களில் புகார்கள் வெளியாகி வருகிறது. இது தொடர்பாக பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள் மூலம் தகவல் கிடைத்த பிறகு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பதை ஏற்க முடியாது. மின்தடை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் நுகர்வோர் எண்ணிக்கை, கோளாறுக்கான காரணம் மற்றும் இணைப்பு பணிகளின் முன்னேற்றம், மின் வினியோகம் ஆகியவை சீரமைக்கப்படும் நேரம் மற்றும் நாட்கள் ஆகியவை குறித்த விவரங்களை முறையாக தெரிவிக்க வேண்டும்.
மின் தடை குறித்த கள ஆய்வு அறிக்கை வெளியிட வேண்டும்
மேலும், பழுது நீக்கும் பணிகள் மற்றும் மின்விநியோகம் மீட்கப்பட்ட நிலை தொடர்பான புகைப்படங்கள் மற்றும் கள ஆய்வு அறிக்கைகள் ஆகியவற்றை பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுக்கு உடனடியாக பகிர வேண்டும். அதிகாரிகள் தொலைபேசி அழைப்புகளுக்கு உடனடியாக பதில் அளித்து மரியாதை உடன் நடந்து கொள்ள வேண்டும். கோடை காலங்களில் மின் தேவை அதிகரிக்கும் நிலையில், மழைக்காலங்களில் கடைபிடிக்கப்படும் அதே அளவிலான விழிப்புணர்வு மற்றும் துரித நடவடிக்கைகளை அதிகாரிகள் உள்ளமாக மேற்கொள்ள வேண்டும். ஏதேனும் முக்கியமான மின்தடைகள் மற்றும் மின் கோளாறுகள் ஏற்பட்டால் ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது என்பதால் மாற்று மின் விநியோக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
மேலும் படிக்க: பெண்கள் மீது கை வைத்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை… முதல்வர் விஜய் விடுத்த கடும் எச்சரிக்கை!




24 மணி நேரத்துக்குள் மின்தடையை சரி செய்ய வேண்டும்
அடிப்படை மின் விநியோக தடையை 24 மணி நேரத்துக்குள் தொடர்ந்து சரி செய்து நிரந்தரமாக மின் விநியோகத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆட்சி காலங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டுகள், அதிக நேரம் மின்வெட்டு ஆகியவை பொதுமக்கள் மத்தியில் புகாருக்குள்ளாகி வந்தது. தற்போது, தமிழக வெற்றிக் கழக அரசு அமைந்துள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அறிவிக்கப்படாமல் மின்வெட்டுகள் நிகழ்ந்து வருகின்றன.
மின்சார துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்
இதற்கு பல்வேறு தரப்பினர் மத்தியில் இருந்து கடும் புகார்கள் மற்றும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக மின்சார துறை அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல் குமார் விளக்கம் அளித்து இருந்தார். மேலும், இது போன்ற மின்வெட்டு சம்பவங்கள் திட்டமிட்டு நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். இந்த நிலையில், மின்வெட்டு தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின்சாரவாரிய தலைவர் அறிவுறுத்தி உள்ளார்.
மேலும் படிக்க: தமிழகத்தில் மீண்டும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. தலைமை செயலாளர் சாய்குமார் உத்தரவு!